Saturday 30 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -13

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நெருக்கடி நிலைநோக்கி இழுத்துச் சேன்ற தேர்தல், 1971ம் ஆண்டு தேர்தல். ஏராளமான தேரதல் முறைகேடு புகார்களை எதிர்க்கட்சியினர் கூறி வந்த நிலையில் உபி மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றிக்கு எதிராக அவரை எதிர்த்து நின்ற ராஜ் நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம் (நீதிபதி ஜக்மோகன்லால் சின்கா) இந்திராகாந்தியின் எம்பி வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் (நீதிபதி கிருஷ்ண அய்யர்) அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 1975ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது. ஏற்கனவே, அலகாபாத் தீர்ப்பு வெளியானதுமே இந்திராவை பதவி விலகச் சொல்லி ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்திக் கொண்டிருந்தனர். 

இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்று நள்ளிரவிலேயே அரசியல் சட்டத்தின் 352வது பிரிவை பயன்படுத்தி நெருக்கடி நிலையை கொண்டு வந்தார், இந்திரா காந்தி. அதற்கு இந்திரா கூறிய காரணம், இந்தியாவில் உள்நாட்டு குழப்பம் அதிகரித்து விட்டது என்பதாகும். நெருக்கடி நிலை உத்தரவில் கையெழுத்திட்டார், இந்திராவால் ஜனாதிபதி பதவிக்கு வந்திருந்த அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது.



இந்தியாவின் ஆறாவது பொதுத் தேர்தலுக்கு சரியாக பத்து மாதங்களுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தமிழகம் உட்பட பல மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டன. பதவி பறிக்கப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைத்து முன் கூட்டியே தேர்தலை இந்திரா நடத்தி இருக்கலாம். அப்படி செய்யாமல், சர்வாதிகாரியாக மாறினார். 

1975 மார்ச் ஜூன் 25ல் அமலான நெருக்கடி நிலை அல்லது எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் இருண்ட காலம், இரண்டு ஆண்டுகள் நீடித்தது.  ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எமர்ஜென்சி நீட்டிக்கப்பட்டது. எமர்ஜென்சி காலம் என்பது மிக நீளமான, சோகமான கருப்பு சரித்திரங்கள் நிரம்பியது. மிசா கொடுமைகள் தாண்டவமாடிய அந்த வரலாறு தனிக்கதை.



அந்த இரண்டு ஆண்டுகளும் இந்திராவும் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தியும் மட்டுமே இந்தியாவின் ஏகபோக முதலாளிகள் போல செயல்பட்டனர். நெருக்கடி நிலை அமலானதும் முதல் கைது, இந்திராவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராஜ் நாராயணன்தான். அதன்பிறகு,  மொரார்ஜி தேசாய், ஜேபி என்ற ஜெயபிரகாஷ் நாராயணன், சரண்சிங், வாஜ்பாய், அத்வானி, அருண் ஜெட்லி என தேச தலைவர்கள் தொடங்கி மாநில அரசியல் தலைவர்கள் வரை பல ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளும் கூட சென்சார் செய்தே வெளியிடப்பட்டன. இந்திரா அரசுக்கு எதிரான செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



கட்டாய கருத்தடையை கொண்டு வந்தார் சஞ்சய் காந்தி. மக்கள் தொகையை காரணம் கூறி ஒரே ஆண்டில் 83 லட்சம் பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்திய ஜனநாயகமும் கருத்தடை செய்யப்பட்டு கிடந்த நிலையில் ஒரு வழியாக, நெருக்கடி நிலையை விலக்காமலேயே 1977ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று இந்தியாவின் ஆறாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: