சினிமாவில் இப்போதெல்லாம் அவ்வளவு எளிதாக விலங்குகளை காண்பிக்க முடியாது. அதற்கு ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டிஸ். ஆனால், இவர் படம் என்றால் நிச்சயம் புலி, சிறுத்தை, யானை மாதிரியான மிருகங்கள் கண்டிப்பாக இருக்கும். அவர்தான் இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திராத தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். ஆடு ஒன்று பிரதானமாக நடித்த ஆட்டுக்கார அலமேலு படம் வரை அவரது தயாரிப்புகள் தமிழ் சினிமாவில் ஏராளம். கட்டுமஸ்தான உடல், ஆஜானுபாகுவான தோற்றம் காரணமாக சாண்டோ (சாண்டோ என்பது ஒருவரின் பெயர், அவரைப் பற்றியது என்ன என்பது தனிக்கதை) ஒட்டிக் கொண்டது.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த இவர் விவசாய, பஞ்சாலை கூலி தொழிலாளியாக இருந்து நடிக்க வந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர். சின்ன சின்ன வேஷம் போட்டுக் கொண்டிருந்த தேவர், ராஜகுமாரி (1947) படத்தில் மெயின் வில்லன் ஆனார். அந்த படம் தான் எம்ஜிஆர் நாயகனாக நடித்த முதல் படம். எம்ஜிஆரின் முதல் வில்லன் தேவர் தான். இரண்டாவது வில்லன் நம்பியார். படம் மந்திரி குமாரி (1950).
ராஜகுமாரியில் எம்ஜிஆருடன் தேவருக்கு ஆரம்பித்த நட்பு மிக ஆழமாக மாறியது. அடுத்தடுத்த எம்ஜிஆர் படங்களில் சண்டைக் காட்சிகளில் தேவருக்கு இடம் உண்டு. சர்வாதிகாரி, குலேபகாவலி என எம்ஜிஆர் படங்களில் வில்லன் குரூப்பில் சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவரை முரட்டு மீசையுடன் பார்க்கலாம்.
தமிழ் சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்ற வார்த்தைகளை 40, 50 வயதினர் மறந்திருக்க முடியாது. அதை அறிமுகம் செய்தவர் தேவர் என்றே கூறலாம். வாள் சண்டை காட்சிகள் பிரதானமாக இருந்த தமிழ் சினிமாவில் சிலம்பம், குஸ்தி டைப் சண்டை காட்சிகளை பிரபலமாக்கியவர் அவரே.
நட்பின் காரணமாக தேவரை தயாரிப்பாளராக்கினார், எம்ஜிஆர். தேவர் பிலிம்ஸ் என்ற பேனரில் சின்னப்பா தேவர் தயாரித்த முதல் படம் எம்ஜிஆர் - பானுமதி நடித்த தாய்க்குப்பின் தாரம். காளையை அடக்குவது, சிலம்பம், முறைப்பெண் என கிராமத்துக்கே உரித்தான அம்சங்கள் நிறைந்தது அந்த படம். தமிழ் சினிமாவில் தந்தை மகன் பாசத்தை கூறும் பாடல் உண்டு என்றால், அது இந்த படத்தின் பாடல் மட்டுமே.
அதன்பிறகு, அன்று பிரபலமாக இருந்த ரஞ்சன் (நீலமலை திருடன் படம்) போன்ற வேறு சில நடிகர்களை வைத்து படம் தயாரித்து தோல்வியடைந்த தேவர், பின்னர் எம்ஜிஆருடன் மீண்டும் கைகோர்த்து 10 ஆண்டுகளில் 16 படங்களை தயாரித்தார். வேட்டைக்காரன், விவசாயி, தாய்சொல்லை தட்டாதே, நீதிக்குப்பின் பாசம் என தொடங்கி நல்லநேரம் வரை நீடித்தது இந்த காம்பினேஷன். எம்ஆர் ராதா - எம்ஜிஆர் விவகாரம் வரை இந்த அணியில் கண்ணாம்பாள், எம்ஆர் ராதா இருவருக்கும் பெற்றோர் வேடம் நிச்சயம் உண்டு. பெரும்பாலும் நாயகனின் விதவை தாயாக கண்ணாம்பாள். நாயகியின் தந்தையாக எம்ஆர் ராதா இருப்பார்.
தயாரிப்பாளரானாலும் எட்டு முழ வேட்டி, வெள்ளை நிற மேல் துண்டு மட்டுமே அவரது உடை. கடைசி வரை தேவரை மொதலாளி என்றே அழைத்தவர் எம்ஜிஆர். 16 படங்களில் பலவற்றை இயக்கிய எம்.ஏ.திருமுகம் MA, சின்னப்பா தேவரின் சகோதரர். 1960களில் குறிப்பிடத்தக்க இயக்குநராக திருமுகம் இருந்தார்.
சினனப்பா தேவர், மிக தீவிரமான முருக பக்தர். தனிப்பிறவி படத்தில் எம்ஜிஆருக்கு முருகன் வேஷம் போட்டு அழகு பார்த்தவர். எம்ஜிஆரையே முருகா என அழைப்பது தேவரின் வழக்கம். படங்களில் கிடைக்கும் லாபத்தில் கணிசமான தொகையை மருதமலை, பழனி என முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து மகிழ்ந்தவர். 1960களில் சரியான பாதை மற்றும் மின்வசதி இல்லாமல் இருந்த மருதமலைக்கு அந்த வசதிகளை செய்து தந்தவர்.
தெய்வ பக்தியால் தேவர் தயாரித்த படங்கள் தெய்வம், திருவருள், துணைவன். தெய்வம் படத்தின் பாடல்கள் இன்றளவும் பக்தி பாடல்கள் வரிசையில் அனைவரையும் கவருபவை. மருதமலை மாமணியே முருகையா... நாடறியும் சுவாமி மலை... மாதிரியான பாடல்கள் சின்ன உதாரணங்கள்.
சிவாஜி கணேசனை வைத்து இவர் படம் எடுத்ததே இல்லை. சிவாஜிக்கான கதை தன்னிடம் வரவில்லை என்பது தேவர் கூறிய விளக்கம். அதே நேரத்தில் இந்தியிலும் படங்களை தயாரித்த தேவர், ராஜஷே்கன்னாவை வைத்து எடுத்த ஹாதி மேரே ஸாதி படம் சூப்பர்ஹிட். அந்த படம் தான் தமிழில் யானைகளுடன் எம்ஜிஆர் நடித்த நல்லநேரம் ஆனது.
தேவர் பிலிம்ஸ் போலவே தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற பெயரிலும் படங்களை தயாரித்தார் சாண்டோ சின்னப்பா தேவர். ரஜினி நடித்த தாய் மீது சத்தியம் படம்தான் தேவரின் கடைசி படம். தயாரிப்பில் படம் இருந்தபோதே இறந்து விட்டார்.
ஆனால், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தார், அவரது மருமகன் தியாகராஜன். ரஜினியின் ஆரம்பகால ஹிட் படங்களான ரங்கா, தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, தர்மத்தின் தலைவன் போன்றவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளே...
(பவளங்கள் ஜொலிக்கும்)
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment