Thursday 23 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 2

தமிழ் சினிமாவின் அறியப்படாத அல்லது இன்றைய தலைமுறை அறிந்திராதவர்களில் முக்கியமான ஒருவர் ஏ.பி.நாகராஜன். கதாசிரியர், நடிகர், இயக்குநர்.

80 மற்றும் 90களில் சிறுவர்களாக இருந்த அனைவருமே திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் படங்களின் வசனங்களை அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு விழாக்கால மைக் செட்களில் ஒலி வடிவமாக ஆண்டுக் கணக்கில் ஓடியவை இந்த படங்கள். இந்த படங்களின் இயக்குநர் தான் ஏ.பி.நாகராஜன்.

சிவாஜி கணேசனின் கர்ணன்,  ஜெயலலிதா, சிவகுமார் நடித்த கந்தன் கருணை. அப்புறம் திருமால் பெருமை, அகஸ்தியர், காரைக்கால் அம்மையார் என இவர் தெறிக்கவிட்ட பக்தி திரைப்படங்கள் ஏராளம். சிவன், முப்பெருந்தேவியர், முருகன், அவ்வையார், மகாபாரத கிருஷ்ணன், கர்ணன், 80 வயது சிவனடியார் நாவுக்கரசர் என அனைவருக்குமே தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர வடிவத்தை உருவாக்கித் தந்ததில் அவரது பங்கு அதிகம்.

இதனாலேயே தெய்வீக இயக்குநர் என்றே அறியப்பட்டவர். 

நாடக ஜாம்பவான் அவ்வை சண்முகத்திடம் பயிற்சி பெற்று சினிமாவுக்கு முதலில் கதாசிரியராகத்தான் இவர் நுழைந்தார். கூடவே நடிப்பு, தயாரிப்பு என சிறகை விரிக்க துவங்கினார். பழம்பெரும் நடிகர் விகே ராமசாமியுடன் சேர்ந்து 1960களில் சில படங்களை தயாரித்திருக்கிறார்.

ராமனாக என்டி ராமாராவ், பரதனாக சிவாஜி என வாழ்ந்த, 1958ல் வெளியாகி 250 நாட்களுக்கு மேல் ஓடிய சம்பூர்ண ராமாயணம் திரைப்படமும் இவரது கைவண்ணம் தான். இந்தியிலும் அந்த படம் டப்பிங் செய்யப்பட்டது. அதற்காக முழுக்க முழுக்க பக்தி பழம் என ஏபி நாகராஜன் மீது முத்திரை குத்தி விடவும் முடியாது.

கொங்கு தமிழ் வசனத்தை திரையில் அறிமுகம் செய்த மக்களை பெற்ற மகராசி, பாவை விளக்கு போன்றவை இவரது எழுத்தில் உருவான காவியங்களே. 1962ல் வடிவுக்கு வளைகாப்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி திருவிளையாடல் என்ற பிளாக் பஸ்டரை கொடுத்த கையோடு அடுத்த 15 ஆண்டுகளில் இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கண்டவை.

சிவாஜி கணேசன் பத்மினி நடித்த எவர்கிரீன் தமிழ் காவியம் தில்லானா மோகனாம்பாள், குருதட்சணை, குலமகள் ராதை. இவையெல்லாம் ஏபி நாதராஜனின் இயக்கத்தில் உருவான படங்கள். சிவாஜி கணேசனை மட்டும் 16 படங்களில் இயக்கி இருக்கிறார்.

தமிழின் முதலாவது சினிமா ஸ்கோப் என்ற பெருமையை பெற்ற ராஜராஜ சோழன்.

சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்த அவரது நூறாவது படமான நவராத்திரி. இந்த படங்கள் எல்லாம் ஏபி நாகராஜன் என்ற மகத்தான இயக்குநரின் மணி மகுடத்தில் வைரக் கற்கள்.

சிவாஜியை மட்டுமல்ல எம்ஜிஆரையும் இயக்கியவர், ஏபி நாகராஜன். ஒன்பது நாயகிகளுடன் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் திரைப்படம் ஏ.பி.நாகராஜன் இயக்கம் தான். எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களை இயக்கிய ஏபி நாகராஜன் வேறு யாருமல்ல...



திருவிளையாடல் படத்தில் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற கணீ்ர் குரலுடன் சிவனுடன் சொல் சமர் புரியும் நக்கீரர் தான். ஐம்பதை எட்டும் முன் சிவனடி சேர்ந்தது, தமிழ் திரையுலகின் துரதிர்ஷ்டம்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: