Wednesday 15 July 2020

காமராஜர்... சகாப்தம்...

 தமிழ்நாட்டின் இன்றைய கல்வி வளர்ச்சிக்கு அஸ்திவாரம். வெறும் 7% கல்வியறிவை 9 ஆண்டுகளில் 37% ஆக்கிய படிக்காத மேதை....

ஐஐடி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களை 60 ஆண்டுக்கு முன்பே தமிழ் நாட்டுக்கு தந்த  தலைவர்...

தெற்கில் இருந்து வடக்கு வரை இன்று உச்சரிக்கப்படும்  அணைகளின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் ஓயாமல் உச்சரிப்பது இவரது பெயரையே...

சென்னை எம்.ஆர்.எல்.(சிபிசிஎல்), நெய்வேலி, சேலம் என தொழில் வளத்தையும் மேம்படுத்திய கருப்பு தங்கம்...

அறிக்கைகளையே சாதனைகளாக பட்டியலிடும் மார்க்கெட்டிங் வித்தை  தலைவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் விழிகள் எல்லாம், இப்படி ஒரு தலைவர் இருந்தாரா என இமைக்க மறந்து நிற்கின்றன...

அரியணையை வென்ற மறு ஆண்டே, தேச சேவைக்காக  பதவியை துறந்த தியாக திருவிளக்கு...

இனம் காட்டும் நிறம். குணம் கூறும் உடை.  துணிச்சலை பறைசாற்றும் உடல்வாகு. கை கூப்பி வணங்கத் தோன்றும் முகம் என நான்கும் இணைந்த நல்லவர். ஒரு சில துளிகளுக்குள் அடக்க முடியாத மகா சமுத்திரம்.

மாதம் முழுவதும் கத்திரிக்காய் சாம்பார் சாப்பாடு என்றாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்து சாப்பிட்டால் அவருக்கு அது விருந்து சாப்பாடு. 

ஆண்டுக்கு இரண்டே இரண்டு நாட்கள் சீஸன் சமயத்தில் குற்றாலம் போய் தங்கி வருவதே அதிகபட்ச சந்தோஷம்!

பத்திரிகையாளர்களுக்கு அவர் கூறிய அறிவுரை எந்தக் காலத்திலும் பொருந்திச் செல்லக் கூடியது. ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் பேசுவார். அவரளவுக்குச் சுருக்கமாக பேச யாராலும் முடியாது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதிலளித்தார். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார்.

இரண்டு முறை பிரதமர் வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கிவிட்டு  ‘கிங் மேக்கர்’ பட்டத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டவர். 

வட இந்தியர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’,  தமிழர்களுக்கு என்றும் அவரே பெருந்தலைவர்.



இருக்கும்போது கைவிட்டு விட்டு கல்லறைக்கு மலர் தூவும் குணாளர்களின் சிலுவைகளையும் மலர்களாய் சுகமாக சுமந்த குணாளா... குணக் கொழுந்தே...


No comments: