Monday 20 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -1


எந்த மனநிலையையும் சாந்தப்படுத்துவது காட்சிகள்தான். சஞ்சலம், கோபம், துயரம் இப்படி மனித மனங்களின் எல்லா உணர்வுகளையும் ஆசுவாசப்படுத்துவது காட்சிகளே. ஜன்னலோர பயணத்தின் இயற்கை காட்சியும் அப்படியே. எழுத்துகளை விட, மனதில் ஆழமாக ஆணி அடித்தது போல பதிவது காட்சிகள் தான். காட்சிகளால் கூறும் தகவல், எளிதில் அழியாது.

அதனால்தான் காட்சியாக அடிக்கடி காணும் அனைவருமே மனதுக்கு நெருக்கமாகி விடுகின்றனர், நீண்ட நாள் பழகியவர்கள் போல். இன்றைய யூ டியூப் தொடங்கி டிவி, கலர் சினிமா, கருப்பு வெள்ளை சினிமா வரை இதுதான் நிதர்சனம். இதில் சினிமா வேற லெவல். அது ஒரு பொழுதுபோக்கு, போதை இப்படி பல விமர்சனங்கள் வந்தாலும் சினிமா சினிமா தான். புறச்சூழ்நிலையை மறந்து மகிழ்ச்சியை தருவதில் உலகில் முதலிடம் சினிமாவுக்குத்தான்.

அதிலும் நூற்றாண்டை எட்டப்போகும் தமிழ் சினிமா பெருங்கடல். இந்த கடலுக்குள் திமிங்கலம், சுறா, டால்பின், திருக்கை, விலாங்கு இப்படி நிறைய அறிந்திருக்கலாம். ஆனால், பெரிதும் அறியாத பல வகைகளும் நிறைந்ததே பெருங்கடல். அப்படி இருப்பதே பூரணத்துவம்.

அந்த பூரணத்துவம் பெற்ற தமிழ் சினிமா எனும் சாகரத்தில் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தில் வைரம், வைடூரியம், தங்கம் என பலவற்றை அறிந்தபோதிலும், பலரும் அறியாத பவளங்களை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

முதல் சினிமாஸ்கோப் படம், பேசும்படம், முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விட்ட ஹீரோக்கள், ஹிட் படங்களை கொடுத்து காணாமல் போனவர்கள், மிகப்பெரிய பிரபலங்களின் குட்டி குட்டி ரகசியங்கள் இப்படி நிறைய சுவாரஸ்யங்கள் சினிமாவை தாண்டி உண்டு.

இயக்குநராக ராமராஜன், இசையமைப்பளர் பாக்யராஜ், இசையமைத்த எஸ்பிபி. திரையில் மின்னி மறைந்த மின்மினி ஹீரோயின்கள் இப்படி பலப்பல கலந்த சினிமாவை திரும்பிப் பார்ப்போம் வாருங்கள். நான் நேரில் அறிந்த 35 ஆண்டுகள். அதற்கு முந்தைய 25 ஆண்டுகள். இந்த அறுபதில் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்களுடன் ஆரம்பிப்போம், தமிழ் சினிமாவின் பவள தேடலை...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்


No comments: