Saturday, 18 October 2014

அன்புள்ள ரஜினிகாந்த்....

அன்புள்ள ரஜினிகாந்த்....
இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னமும் தமிழக மக்களின் அன்புக்குரியவராகவே இருக்கிறார், ரஜினி. ‘16 வயதினிலே’ படத்தில் பரட்டை கதாபாத்திரத்தில் அவரது வில்லத்தனம் கண்டு மிரண்ட தமிழ் ரசிகர்கள், பின்னாளில் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட தொடங்கியது காலம் அவருக்கு அளித்த பரிசு. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, ‘மூன்று முடிச்சு’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவே தலை காட்டிய ரஜினியின் கலைப்பயணம் சாதாரணமானது அல்ல. நடந்தவை அனைத்துமே வியத்தகு வளர்ச்சி. ஒவ்வொரு படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியதோடு அவரை திரையுலகின் ராஜாதி ராஜாவாக்கினர், தமிழக மக்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியானபோது, தமிழகமே சுறுசுறுப்பானதே. அந்த படத்தை இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் கூட எனது 10 வயது மகன் ரசித்து பார்க்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது கூட விளம்பர இடைவேளை சமயத்தில் ரிமோட்டை தேடும் அவன், ‘பாட்ஷா’ படத்தை விளம்பரங்களுடன் பார்த்ததை கண்டு வியந்தேன். இத்தனைக்கும், அவன் ஏற்கனவே சில முறை அந்த படத்தை பார்த்திருக்கிறான். அந்த படம் வெளியாகி 10 ஆண்டுக்கு பிறந்த சிறுவனை கூட கவர்ந்திழுக்கும் அந்த திரைபடத்தின் வெற்றி விழா சமயத்தில் ரஜினிகாந்த் உதிர்த்த வார்த்தைகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டன. ‘இப்போதைய ஆட்சி மீண்டும் திரும்பினால்.... இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்பதே அந்த வார்த்தைகள். அதன்பிறகு, ‘ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று பட்டி தொட்டி எங்கும் பரவிய வாசகங்களும், அமெரிக்காவில் இருந்தபடியே ரஜினி அளித்த தொலைக்காட்சி பேட்டியும் தமிழகத்தில் அரசியல் பிரளயத்தையே ஏற்படுத்தின.

அதன்பிறகு, அவ்வப்போது அரசியலுக்கு ரஜினி வருவதாக தகவல்கள் வெளியாவதும் அந்த சமயங்களில் அவரது ஏதாவது ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற உடனேயே அந்த செய்திகள் அடங்குவதும் வாடிக்கையாகி விட்டன. இப்போது கூட, அவரை சுற்றி ஒரு அரசியல் வட்டம் பிரகாசிக்க தொடங்கி இருக்கிறது. வயதும் அறுபதை கடந்து விட்டதால், இனி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ஒரு கூட்டம் எதிர்பார்ப்பது உண்மை. ஆனால், அதற்கு முன் சில உண்மைகளை அவர் புரிந்து கொள்வது அவசியம். 1999ம் ஆண்டு படையப்பா வெளியான பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் அவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 4 மட்டுமே (குசேலனை தவிர). அதிலும் பாபா பிளாப். இந்த நிலையில் கூட, ரஜினி என்ற மூன்றெழுத்துக்கு தமிழகமே கட்டுண்டு கிடக்கிறது. இதை அவருக்கான ஏகபோக ஆதரவு என்று கருதினால், அதை விட இமாலயத் தவறு எதுவும் இருக்காது.

ஏனெனில், திரையுலகம் வேறு. அரசியல் களம் வேறு. குடும்பங்கள் தொடங்கி பணி புரியும் இடங்கள் வரை எங்கெங்கும் அரசியல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் அரசியல் துறையில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். திரையுலகில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் பற்றிய தகவல்களையும் ரஜினி ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தந்தை பெரியாரால் பட்டம் சூட்டப்பட்ட நடிகவேள் எம்ஆர் ராதா, லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் ஆகியோர் அரசியலில் தீவிர நாட்டம் கொண்டவர்கள். அவர்கள், ஆட்சியிலோ  அதிகாரப் பதவியிலோ அமர்ந்ததில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகப் பட்டாளத்தை வைத்திருந்த (இன்றும் வைத்திருக்கும்) சிவாஜி கணேசனால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அவர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை கூட தமிழக அரியணையில் அவரால் ஏற்ற முடியவில்லையே? அது மட்டுமல்ல. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அதிமுக (ஜா) அணியுடன் 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அவர் சந்தித்தபோது, அந்த அணிக்கு 4வது இடமே கிடைத்தது. அவரே  தொகுதியில் 3ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். எம்ஜிஆரால் கலை உலக வாரிசு என அடையாளம் காட்டப்பட்ட பாக்கியராஜ் மற்றும டி.ராஜேந்தர் ஆகியோரின் அரசியல் பயணமும் இந்த வழியில் தான் முடிந்தது.

தியாகு, வாகை சந்திரசேகர், நெப்போலியன், ராதாரவி, ராமராஜன், குமரி முத்து, தீபா, சிம்ரன், விந்தியா என திரையுலக அரசியல் பிரபலங்கள் ஏராளம். வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொது ஒற்றுமை உண்டு. அதாவது, தேர்தல் சமயங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளால் அவர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றனர். இந்த வரிசையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் அரசியலில் குதித்தவர், விஜயகாந்த். தனித்து நின்றபோது தனியாளாக மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. இன்றைய அரசியல் அரங்கில் அவரது நிலைமையும் நிலைப்பாடும் என்ன என்பதை ரஜினிக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கனவு தொழிற்சாலை என்னும் திரையுலகம் வேறு. மக்களின் கனவுகளை தொழிற்சாலையாக்கி லாபம் பார்க்கும் அரசியல் உலகம் வேறு.

இந்த அரசியல் சூழலில் நீந்தி கரை சேர்ந்ததோடு அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், எம்ஜிஆர் மட்டுமே. மேலெழுந்தவாரியாக பார்த்தால் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்குள் ஆட்சியை எம்ஜிஆர் கைப்பற்றியது போல தோன்றும். உண்மையில், 1950ல் தொடங்கி 27 ஆண்டு கால அரசியல் பயணத்துக்கு பிறகே அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது. முதன் முதலில் அவர் கதை நாயகனாக நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி (கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படம்) படங்கள் வெளியான சமயத்திலேயே திராவிட இயக்கத்துடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தனது படங்களில் காட்சிகள், நடிகர்களின் உடை, பாடல்கள் என சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுக கொள்கையை, கட்சிக் கொடியை, சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் அக்கறை காட்டினார்.

திரையுலகம் மட்டுமல்ல நேரடி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் அவர் பங்காற்றினார். திமுக முன்னணி பேச்சாளர்களுக்கு இணையாக ஊர் ஊராக சென்று பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். ‘தம்பி... ராமச்சந்திரா.  உன் முகத்தை காட்டு ஓரு லட்சம் ஓட்டுகள் விழும்’ என்று பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளும் ‘வேட்டைக்காரன் வருவாண்ணேன்.. வேட்டையாடிட்டு போயிருவாண்ணேன்...’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறிய வார்த்தைகளும் இதை உறுதிப்படுத்துபவை. 1967ம் ஆண்டு முதலில் எம்எல்ஏ ஆனார். பின்னர், 1972லும் எம்எல்ஏ. அதன்பிறகே 1977ல் தமிழக முதல்வராக முடிந்தது. எம்ஜிஆரின் இந்த 27 ஆண்டு கால அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு ஆகியவை கவசங்களாக இருந்ததால் தான் அரசியல் களத்தில் ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்தது.

எனவே, எம்ஜிஆர் வழியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று ரஜினிகாந்த் கருதினால் அது அவரது அறியாமையின் வெளிப்பாடாகவே அமையும். மேலும், அரசியல் என்பது சாதாரணமானது அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட ஜென்ம விரோதிகளாக மாறும் ஆச்சரியங்கள் நடைபெறும். கூரிய வாளாக விமர்சனங்கள் பாய்ந்து வந்து இருதயத்தை அறுத்தெடுக்கும். ‘மலையாளி, அட்டைக்கத்தி வீரர்’ என்பதெல்லாம் எம்ஜிஆர் எதிர்கொண்ட விமர்சனங்களில் சில. காமராஜர் பற்றிய விமர்சனங்களை அச்சில் ஏற்ற முடியாது. பேரறிஞர் அண்ணாவை கூட தெலுங்கு நடிகை ஒருவருடன் இணைத்து பேசியது உண்டு. இதுபோன்ற விமர்சன பானங்களால் ஜெயலலிதாவும் துளைத்து எடுக்கப்பட்டார். நேற்று அரசியலுக்கு வந்த குஷ்பு வரை இந்த தனிநபர் விமர்சனங்கள் தொடருகின்றன. தமிழகத்தின் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பற்றிய விமர்சனமும் தமிழக மக்களிடையே அவரைப் பற்றி உருவாக்கப்பட்டு இருக்கும் ஒருவித பிம்பமும் ரஜினி அறியாதது அல்ல.

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ரஜினி காந்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஓட்டு அறுவடை செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளன என்பதே உண்மை. ஒருவேளை ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அவர் இணைந்தால், மாற்று அணிகளில் இருந்து கிளம்பும் சரம் சரமான விமர்சன கணைகளை எப்படி எதிர்கொள்வார். 1999ம் ஆண்டில் பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தபோது ரஜினியை நோக்கி ராமதாஸ் எழுப்பிய 10 கேள்விகள் இன்னமும் விடை கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன. இதுபோல, ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக ரஜினி அளித்த வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியலில் புகுந்தால் இவை எல்லாம் விசுவரூப விமர்சனங்களாக மாறலாம். தமிழகத்துக்கு அவர் செய்தது என்ன? என்பதில் தொடங்கி அவரது கர்நாடக பூர்வீகம் வரை அலசப்படும். நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார். அதுவும் இப்போது தூசி தட்டி எடுக்கப்படும். இதற்கெல்லாம், அரசியல் ரீதியாக என்ன பதில் வைத்திருக்கிறார், ரஜினி.

எந்த வித தொந்தரவும் இல்லாமல் நடிப்பு, ஓய்வு, ஆன்மிகம், அமைதி என்று செல்லும் ரஜினியின் வாழ்க்கை ஓட்டத்துக்கு எந்த அளவுக்கு அரசியல் கை கொடுக்கும்?  என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், விமர்சனத்தை எதிர் கொள்ளும் சக்தியும் தோல்வியை கண்டு துவளாத மனப் பக்குவமும் இருந்தால் அரசியலுக்கு ரஜினி வரலாம். ஏனெனில், இது ஜனநாயக நாடு. சாதாரண மனிதனும் அரியணை ஏறலாம், ஆட்சி பரிபாலனம் செய்யலாம்.... மக்கள் ஆதரவு இருந்தால்....!

இந்த ஆதரவை பெற முடியாமல் தோல்வியை நோக்கி ரஜினியின் அரசியல் பயணம் சென்றால்.....? வனத்தில் கம்பீரமாக உலவும் சிங்கமானது, சர்க்கஸ் கூண்டிலோ உயிர்க்காட்சி சாலையின் செயற்கை வனத்திலோ உலவ நேரிடலாம். ஆனால், சிங்கம் என்பது சிங்கமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

= வை.ரவீந்திரன் 

Monday, 13 October 2014

அரசியல் சதுரங்கத்தில் ஜெயலலிதாவின் பரம பத ஆட்டம்...



எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தின்போது அமைச்சராக இருந்த தற்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் அப்போது கூறிய வார்த்தைகள் பத்திரிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. அது, ‘எம்ஜிஆர் தான் நம்பர் 1. நாங்கள் அனைவருமே  பூஜ்ஜியங்கள்’ என்ற வார்த்தைகள் 1ம் எண் இல்லாவிட்டால் வெறும் பூஜ்ஜியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது அவரது கருத்து. அவருடைய அந்த கருத்து இன்றும் கூட அதிமுகவுக்கு பொருத்தமானதாகவே இருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம். 1ம் எண் மட்டும் மாறி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர். இப்போது ஜெயலலிதா.

முதன் முதலில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் நடைபெற்ற குற்றத்துக்காக தற்போது, அவரும் சிறை சென்று விட்டார். இனி, அதிமுக நிலைமை என்னவாகும்? ஜெயலலிதாவின் எதிர்காலம் என்னும் பாதை எந்த திசை நோக்கி செல்லும்? தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்படுமா? இப்படி விடை காண முடியாத அல்லது விடையை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் சுழன்று கொண்டு இருக்கின்றன. இந்த தருணத்தில் ஜெயலலிதாவின் 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பி பார்க்கலாம்.

கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வரும் ஜெயலலிதாவின் அரசியல் பாதை முழுவதும் வித்தியாசமானது. சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் தொடங்கியபோது அது தொடர்பான பணிகளுக்காக வந்த ஜெயலலிதாவை அவரது விருப்பத்தை அறியாமலேயே அரசியல் இழுத்துக் கொண்டது. 1982ம் ஆண்டில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மேல்சபை எம்பி என பதவிகளும் வரிசை கட்டி வந்தது. ஜெயலலிதாவின் அரசியல் பாதை ஏறுமுகமாக சென்றபோது 1987 டிசம்பரில் எம்ஜிஆர் மறைந்தார்.

அதன்பிறகு, அதிமுக மூத்த தலைவர்களுக்குள்ளேயே நடைபெற்ற தகராறுகள் அனைத்தும் அதிமுக வரலாற்றில் மட்டுமல்ல தமிழக அரசியல் சரித்திரத்திலும் கருப்பு பக்கங்கள். ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எம்ஜிஆர் உடல் இருந்த வண்டியின் மேல் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். துக்க வீடுகளில் சொந்த பகையை தீர்த்து வைக்கும் வழக்கம், அங்கும் அரங்கேறியது.

பின்னர், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகம் அதுவரை கண்டிராத அளவுக்கு திமுக, காங்கிரஸ், ஜெ அணி, ஜா அணி என 4 முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் அதிமுகவின் இரண்டு அணிகளுக்குமே ஏமாற்றம் மிஞ்சியது. தமிழகத்தின் அரியணையை 12 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது. அதே நேரத்தில், அதிமுக தொண்டர்களும், அபிமானிகளும், எம்ஜிஆர் விசுவாசிகளும் ஜெயலலிதா பக்கம் பெரும்பான்மையாக நிற்பது நிரூபணமானது. அறிமுகமே இல்லாத சேவல் சின்னத்தில் தேர்தல் களமிறங்கி 29 தொகுதிகளை கைப்பற்றினார், ஜெயலலிதா. போடி நாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழக சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரானார்.

ஆனால், எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையிலான அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வி அடைந்தார். அவர் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தோல்வியை ருசித்தார். அந்த தேர்தலுக்கு பிறகு, இரண்டு அணிகளும் ஒன்றாகின. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து பேரவையில் கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டு தலைவிரி கோலமாக சட்டசபையில் இருந்து வெளியேறினார், ஜெயலலிதா.

அப்போது, அவர் எடுத்த சபதம், ‘இனிமேல் இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’. ஏற்கெனவே, 1977ம் ஆண்டில் இதே போன்ற சூழ்நிலையில் சபையில் இருந்து வெளியேறியபோது, எம்ஜிஆரும் இந்த வார்த்தைகளையே கூறி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. 

அதன்பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அவரது வயது 43. அரசியலுக்குள் நுழைந்து 10 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய பதவி அவரை தேடி வந்தது. இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வழி நடத்தி வந்தவர்கள், நெடுஞ்செழியன் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்டி சோமசுந்தரம் போன்ற அதிமுக தலைவர்கள். ஆனால், இளம் வயதிலேயே மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததும் கூடா நட்பு, அதிகார போதை, பக்குவமின்மை போன்றவற்றால் ஏற்றி விட்டவர்களை கழட்டி விட்டார். அதன் விளைவு தான், 20 ஆண்டுகளை கடந்து இன்றும் காலை சுற்றிய பாம்பாக மாறி கடித்திருக்கிறது. எனினும், ஜெயலலிதாவின் இந்த போக்குக்கு 1996ம் ஆண்டிலேயே தமிழக மக்கள் மிகச் சரியான தண்டனையை வழங்கினர். அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது. தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் சுகவனம் என்ற முன்பின் அறிமுகமில்லாத திமுக வேட்பாளரிடம் ஜெயலலிதா பரிதாபகரமாக தோற்றார். ‘யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பு’ என சுகவீனத்தை பார்த்து கருணாநிதி கூறிய வார்த்தைகளும் அப்போது பிரபலமானது. விமர்சனமும் செய்யப்பட்டது.  

இந்த காலகட்டத்தில் தான், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர அப்போதைய கவர்னர் சென்னாரெட்டியிடம் சுப்பிரமணியசாமி அனுமதி பெற்றிருந்தார். 1996ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு ஊழல் வழக்குகளை ஜெயலலிதா மீது பாய்ச்சினார். சென்னை மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். நாள்தோறும் அவருக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது என்பதை அப்போதைய சட்ட அமைச்சர் ஆலடி அருணா பட்டியலிட்டது தனிக்கதை. இப்போது, ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்று தந்துள்ள வழக்கும் அந்த சமயத்தில் தான் தீவிரமானது.  
ஆனால், வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சாமியே 1998ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணியாக இருந்தார் என்பதும் மதுரை பாராளுமன்ற தொகுதியில் நின்று எம்பியாக வெற்றி பெற்றார் என்பதும் இப்போதைய சூழ்நிலையை உற்று கவனிப்பவர்களால் நம்ப முடியாத உண்மை. அதுமட்டுமல்ல. இரண்டு மாத சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்ததும் மதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா களமிறங்கினார். இப்போது, ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பாமகவும், வழக்கின் ஆரம்பகட்டத்தில் அவருடன் கூட்டணியில் இருந்தது என்பதும் ஆச்சரியமான தகவல். அந்த தேர்தலில் 4 எம்பிக்களை வென்றதோடு மத்தியிலும் வாஜ்பாய் அரசில் மந்திரி பதவிகளை பெற்றது, பாமக.

1996 தோல்வி, இரண்டு மாத காலம் சென்னை மத்திய சிறையில் வாசம் என அஸ்தமனம் நோக்கி சென்ற ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி தெம்பை கொடுத்தது. அப்போது, அதிமுக மட்டும் 18 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனாலும், அவரது அடிப்படை குணம் மாறவில்லை. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த போதிலும் கடிதத்தை ஜனாதிபதியிடம் அளிப்பதில் காலதாமதம் செய்தார். கடைசியில் 13 மாதங்களில் அந்த ஆட்சியை கவிழ்க்கவும் செய்தார். அந்த ஆட்சி கவிழ்ப்பு செயலில் அப்போது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர் இதே சுப்பிரமணிய சாமி. 

ஜெயலலிதாவின் இத்தகைய தான் தோன்றித்தனத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார், கருணாநிதி. அதனால், மத்தியில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்து 1999ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாஜக கூட்டணிக்குள் திமுக புகுந்தது. அதிமுக வெளியேறியது. அப்போது, மத்தியில் கால் தடம் பதித்த திமுக, சுமார் 15 ஆண்டு காலம் இடைவிடாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது என்பது ஊரறிந்த உண்மை. திமுகவின் இந்த ஏற்றத்துக்கு ஜெயலலிதாவே ஒருவகையில் மறைமுக காரணம். வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜகவுடன் அவர் இணக்கமாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பு திமுகவுக்கு கிட்டி இருக்காது. 

மத்தியில் கிடைத்த செல்வாக்கை தவற விட்டாலும், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மூப்பனாரின் தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அப்போது, டான்சி ஊழல் வழக்கு காரணமாக அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எனினும், அதிமுக வெற்றி பெற்றதும் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இதே ஓ.பி.எஸ்சிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்து விட்டு 7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல்வரானார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியதால், 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் திமுக தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைப்பது போல, ஜெயலலிதாவுக்கு மிகச் சரியாக செக் வைப்பதில் தீவிர கவனம் செலுத்தியது. வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற உறுதுணையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது.
ஆனாலும், 1996ம் ஆண்டு தேர்தல் தோல்வியை தவிர்த்து பார்த்தால் தமிழகத்தில் அவரது செல்வாக்குக்கு எந்த பங்கமும் நிகழவில்லை. எனினும், வெற்றி, தோல்வி என்ற பரமபத விளையாட்டாகவே அவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட ஆளும் அதிமுக தோல்வி அடைந்தாலும் 70 தொகுதிகளை கைப்பற்றியது. அப்போது, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் அமர்ந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 25 இடங்கள் தான் வித்தியாசம். அதனாலேயே, ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்பதை கூறி வந்தார், ஜெயலலிதா. அப்போதைய திமுக ஆட்சியின்போது, ஒருமுறை அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் ஜெயலலிதா சபையில் இல்லை. அதனால், அவருக்கு அந்த உத்தரவு பொருந்தவில்லை. எனவே, தனியாளாக மறுநாள் சபைக்கு சென்று திமுக மூத்த அமைச்சர்கள் அனைவரும் திணறும் அளவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி திணற வைத்தார். ஜெயலலிதா. அப்போது, அவருடைய அரசியல் மற்றும் ஆட்சி அனுபவ அறிவு வெளிப்பட்டது.


அதன்பிறகு, 2011ம் ஆண்டு சட்டப்பேரவை  தேர்தலை தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சந்தித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். வழக்கம்போல, அவருடைய குணம் வெளிப்பட்டது. கம்யூனிஸ்ட், தேமுதிக கட்சிகளுடன் பகைமை ஏற்பட்டது. 2014 தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தனியாக புறப்பட்டார். வென்றார். ஆனால், அந்த வெற்றியால் கிடைத்த பலன் என்ன? தற்போது, தமிழக அரசியலில் இன்று தனியாகவே அதிமுக இருக்கிறது. தற்போது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதிமுகவுக்கு எதிராக ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதிமுகவின் நிலைமை என்னவாகும்......? ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் எப்படி போகும்.......?  

வெயிட் அண்ட் ஸீ....

= வை.ரவீந்திரன். 

Friday, 19 September 2014

மோடிக்கு ஒரு கடிதம்





இந்தியாவின் பிரதமராக தாங்கள் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து விட்டன. திரைப்பட உலகில் மட்டுமே வெள்ளி விழா, வெற்றி விழா போன்றவை கொண்டாடப்படுவது வழக்கம். திரைப்படத்தை பார்த்தே வளர்ந்து வரும் சமுதாயம் என்பதால் 100 நாள் என்பது முக்கியமான தருணமாகவே தெரிகிறது. அதனால், 100 நாளை கடந்த தங்களுடைய ஆட்சிக்கு வாழ்த்துக்கள். உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் முகமே பிரகாசமாக தெரிந்தபோது மிகவும் வருத்தம் அடைந்த உள்ளங்களில் நானும் ஒருவன். அதனாலேயே, ஆட்சி மாற்றம் வர வேண்டும். அதுவும் தங்களைப் போன்ற ஒரு தலைவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆசைப்படியே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தை கைப்பற்றி விட்டீர்கள். இது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத சாதனை. 1991ம் ஆண்டு ராஜீவ் கொல்லப்பட்ட சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியால் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. தங்களுடைய அரசியல் முன்னோடி வாஜ்பாயிக்கு கூட இந்த அளவுக்கு அபரிமிதமான வெற்றியை மக்கள் வழங்கவில்லை. ஆனால், தங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றால் அதற்கு காரணம் நீங்கள் அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் புரையோடிப் போன ஊழல்கள் தான்.

நம்முடைய மக்கள் மிகவும் நல்லவர்கள். குறிப்பிட்ட அளவுக்கு ஊழல் செய்வதை பொறுத்துக் கொள்வார்கள். அதுவே, லட்சம் கோடி, கோடி கோடி என புறப்பட்டால் எரிமலையாய் பொங்கி விடுவார்கள். காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மும்பையில் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், ஈராக்கில் உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல், இந்தியாவின் ஊழல் புகழை வானளாவ பரப்பிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க (கோல்கேட்) ஊழல் என அரசின் சாதனைகளைப் போல ஊழலும் தனியாக பட்டியலிடப்படும் அளவுக்கு நீண்டு கிடந்தது. அதைப்பார்த்து வெறுத்துப் போய் இருந்த இந்திய மக்கள் அனைவரும் எரிமலையாக பொங்கியதால் காங்கிரஸ் பொசுங்கிப் போனது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று தீர்மானித்து விட்டனர். மாநிலம் தோறும் வான் வெளியில் பரந்து சென்று நீங்கள் ஆற்றிய எழுச்சி உரையும், ஆயிரக்கணக்கான டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பில் தோன்றி அளவளாவிய அணுகுமுறையும் மக்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள். அதனால் தான், 2009ம் ஆண்டு முதல் மாற்றத்தை தேடி அலைந்த மக்களின் மனதில் சரித்திர புருஷராக தோற்றம் அளித்தீர்கள். தங்களால் அனைத்தையும் மாற்றிக் காட்ட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், நடப்பது என்ன.....?

ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு உங்களுடைய செயல்பாட்டை பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புதிய முகமூடியுடன் பழைய ஆட்சியே தொடருகிறதோ என்ற சந்தேகமும் சில சமயங்களில் எழுகிறது. ஊழலுக்கு எதிரான கோஷத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த நீங்கள் இந்த 100 நாட்களில் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள். ஒருவேளை அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால், அது நீதிமன்றங்களின் தலையீட்டால் நடந்தவைகளாகத்தான் இருக்கும். ஆட்சிக்கு வந்ததில் இருந்து 10 மாநிலங்களுக்கு மேல் கவர்னர்களை மாற்றி விட்டீர்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கும் தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக மேற்கு வங்க கவர்னர் நாராயணன், கேரள கவர்னர் ஷீலா தீட்சித் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. அதன்பிறகு, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டெல்லியில் 15 ஆண்டுகள் கோலோச்சி காமன்வெல்த் விளையாட்டின்போது ஊழலில் புகுந்து விளையாடிய ஷீலாவுக்கு சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு கவர்னர் பதவியை முந்தைய காங்கிரஸ் அரசு அளித்தது. இது, ஊரறிந்த ரகசியம். தற்போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷீலா தீட்சித் மீது எடுத்த நடவடிக்கை என்ன? மற்ற ஊழல்களும் எந்த நிலையில் இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, நடுத்தர மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ரெயில் கட்டண உயர்வு, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு என தொடரும் சுமைகளால் மக்கள் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தலை மீது அழுத்தும் பாறாங்கல்லின் சுமை அப்படியே இருந்தால் பழகி விடும். அதை சற்று அசைத்து விட்டு மீண்டும் வைத்தால் வலி முதலில் இருந்து தொடங்கும். அதைத்தான் தாங்கள் செய்திருக்கிறீர்கள். சுமையை இறக்கி வைக்காவிட்டால் கூட பரவாயில்லை. அதை அசைக்கும் பணியைத்தான் செய்திருக்கிறீர்கள். வருமான வரி உச்ச வரம்பிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. தமிழர்களை விரோதியாக பார்க்கும் ராஜபக்சே உடன் கை குலுக்குகிறீர்கள். அது, ஆசியாவில் இந்தியாவை வல்லரசாக நிரூபிக்க எடுக்கும் ராஜ தந்திரம் என்று தங்களின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அப்படியே இருக்கட்டும். நேபாளம், ஜப்பான், அமெரிக்கா என்று தங்களுடைய உலகளாவிய பயணங்கள் தொடருகின்றன. அப்படியே, உள்ளூரில் இருக்கும் இந்தியர்களையும் சற்று கவனத்தில் கொண்டால் நல்லது.

அதே நேரத்தில், ஊழலைக் கண்டு பொறுக்க மாட்டோம் என்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா என்று மக்களிடம் அனுமதி கேட்டுக் கொண்டும் நாளை கடத்திக் கொண்டு இருப்பது நியாயமா? உண்மையில், தங்களின் உரை வீச்சும் பேச்சாற்றலும் இன்னமும் கூட வசீகரமாக இருக்கிறது. இது, தங்களை தயார் படுத்தும் ஹைடெக் குழுவினரின் அதிகப்படியான திறமையாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் 60 சதவீதத்துக்கு மேலான மக்கள் இன்னமும் இதுபோன்ற ஹைடெக் வாசனையை நுகராமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்களுடைய இத்தகைய போக்கை காணும்போது 40 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா நாவலில் தேசிய தலைவராக வரும் ‘ஜீவா’ என்ற பச்சை நிற ஸிந்தடிக் கதிர்வீச்சு முப்பரிமாண பிம்பம் தான் நினைவுக்கு வருகிறது. உங்களை ஆட்டுவிக்கும் ஹைடெக் குழுவினரை புரட்சி படையினர் எனப்படும் ரவி மற்றும் மனோவாக பார்க்கத் தோன்றுகிறது.

தங்களிடம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை மக்கள் வைத்திருக்கின்றனர். அது கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்துப்போவதை அவர்களால் ஜீரணிக்க முடியாது. அதன் வெளிப்பாடே இடைத் தேர்தல் தோல்விகள். டெல்லியில் எம்பி தொகுதிகளை மொத்தமாக அள்ளி எடுத்து 4 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால், அங்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் தயங்குகிறீர்கள் என்றால் மக்கள் எந்த அளவுக்கு தங்களுடைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை இயக்கிய பெரு முதலாளிகள் தான் அந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதை அறிந்து தங்களை முன்னிறுத்தினார்களோ என்ற சந்தேகமும் சாமான்ய இந்தியனின் இதயத்தில் துளிர் விடுவதை உங்களால் காண முடியவில்லையா?

இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்பது தேசப்பிதா மகாத்மாவின் கருத்து. இன்றளவும் அதுவே நிஜம். எனவே, தங்கள் மீது எத்தகைய எதிர்பார்ப்பை சாமான்ய இந்தியன் வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மோடி என்றால் சூப்பர் ஹீரோ என்ற இமேஜ் பதிந்து விட்டது. எனவே, ஊழலுக்கு எதிராக அதிரடி சாகசங்களை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அத்துடன், கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று போதித்த காந்தியடிகள் அவதரித்த மண்ணில் பிறந்த நீங்கள், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், பள்ளிக் குழந்தைகளிடம் ஆசிரியர் தினத்தன்று நீங்கள் கூறியது போல, 2024ம் ஆண்டில் தான் தங்களை வீழ்த்துவது குறித்து அரசியல் எதிரிகள் யோசிக்க அவகாசம் கிடைக்கும். தங்களுக்கு, இன்னும் முழுமையாக நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன.

= இப்படிக்கு,
சாதாரண இந்திய குடிமகன்.

Tuesday, 19 August 2014

வெயிலோடு விளையாடி .... வெயிலோடு உறவாடி .....

வெயில்.

நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. வெயிலை சுவாசித்து வெயிலை தோழனாக பாவித்து வெயிலோடு விளையாடிய அனுபவம்  நிச்சயமாக இருக்கும். ஜன்னல் வழியே நூலிழையாக வீட்டினுள் நுழைவதும் படிக்கட்டுகளில் வழிந்து செல்வதும் வயல் வெளியில் வெளிச்சம்  பாய்ச்சுவதும் வெயிலின் பன்முகங்களில் சில முகங்கள். ஆடு மாடுகளின் முதுகில் தவழும் வெயில். சாலையில் சறுக்கி செல்லும் வாகன  முகடுகளில் மின்னல் கீற்றை ஏற்படுத்தும் வெயில் என வெயிலோடு வளர்ந்த மனிதர்கள், நாம்.

ஆனால், வெயிலுக்கு பெயர் பெற்ற பாலைவன வெயில் முற்றிலும் மாறுபட்டது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கி நிற்கும்  மூர்க்கத்தனமான வெயிலையும் அதை தாங்கி நிற்கும் பாலைவனத்தையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் காணலாம். அங்குள்ள தார்  பாலைவனத்தில்தான் கரைகளற்று ஓடும் நதியென வெயில் பரவி நிற்கிறது. திக்கு தெரியாமல் வியாபித்து நிற்கும் வெயிலை பிரதிபலிக்கும  மணற்பரப்புடன் கூடிய தார் பாலைவனம், தனி உலகம். சூரியனுக்கு மிகவும் பிடித்த பகுதி.

அதிகாலையில் கடலில் குளித்தெழும் உதயசூரியனை கண்டு மகிழ்ந்திருப்போம். பாலைவன மணலில் விழித்தெழும் சூரியனை பார்த்து  இருக்கிறீர்களா? அதை தார் பாலைவனத்தில் காணலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தார் பாலைவனம்.  அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை 15 கி.மீ. மார்ச் மாதத்தில் கூட அதிகாலை 6 மணியை தாண்டியும் இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. இருட்டு என்றால்  குறைவான வெளிச்சம் அவ்வளவு தான். அந்த குறைந்த வெளிச்சத்திலும் பாலைவன காற்றுடன் கலந்து மணல் துகள்கள் எழுந்து நின்று  வரவேற்கின்றன.



இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட மஞ்சள் நிற மணல் துகள்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொலைதூரத்தில் மிக  மெல்லிய புள்ளியாக தோன்றி மெதுமெதுவாக சூரியப்பந்து விரிவடைய துவங்குகிறது. அது, பாலைவன சூரியோதயம். கடலில் குளித்தெழும்  சூரியனை போலவே பாலைவன மணலில் குளித்தெழுகிறது, சூரியன். மணலில் இருந்து எழும்பிய வேகத்தில் சில மணித் துளிகளிலேயே தனது  பெரிய கால்களால் வானத்தை நோக்கி சரசரவென ஏறத் துவங்குகிறது. காலை நேர மஞ்சள் ஒளிச் சிதறல் பட்டதும் மணல் பரப்பில் புதுப் பொலிவு  கூடுகிறது. அந்த மணலை ஆவலுடன் அள்ளி எடுத்தால் காதலனை தேடிச் செல்லும் காதலியாக ஆற்றாமையுடன் வந்து சேரும் காற்று அதை  கலைத்து விடுகிறது.

வளைந்து யெளிந்து செல்லும் காற்றின் காலடித் தடத்தை பாலைவன மணலில் தெளிவாக பார்க்கலாம். காற்றின் காலடி தடங்கள் தான் பாலைவன  மணலில் ஓவியமாகவும் அலை போன்ற கோடுகளாகவும் கிடக்கின்றன. காற்றின் மூர்க்கம் அதிகமாகும்போது ஒரு மணல் குன்றையே பெயர்த்து  எடுத்து சற்று தள்ளிச் சென்று வைக்கிறது. பாலைவனத்தில் மணல் குன்றுகளை கட்டுவதும் அழிப்பதுமாக இருக்கும் காற்றின் சேட்டையை ரசித்துக்  கொண்டிருக்கும்போதே வியர்த்துக் கொட்டுகிறது.

சுறு சுறுவென வானில் ஏறிய சூரியன், சில மணி நேரத்துக்குள் 40 டிகிரி செல்சியசில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வெயிலையே குடித்து  வளர்ந்த வெப்ப பிரதேசத்து மனிதனாக இருந்தால் கூட, அந்த வெயிலை எதிர் கொள்வது மிகவும் கடினம். பாலை வனத்தில் பகல் நேரம் என்பது  சிக்னலுக்கு காத்திருக்கும் சமயத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில் போன்றது. மணல் குன்றுகளுக்கு இடையே தோன்றும் கானல் நீர் கூட அருகில்  செல்லும் வரை நீரோடை போல காட்சியளித்து மாயாஜாலம் செய்கிறது.



பாலைவனத்தில் குவிந்து கிடக்கும் மிக நுண்ணிய மணல் துகள் ஒவ்வொன்றும் ஆச்சரியம். மணல் துகள்களை தன்னுள் வைத்துள்ள பாலைவனம்  ஒரு புரியாத புதிர். உள்ளே தொலைதூரம் சென்று விட்டால் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து ஆகாரமின்றி அவதிப்பட நேரிடலாம். அதை  நினைத்தால், சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தில் செல்லும் காதலர்களின் நிலைமை காட்சியாக மனத் திரையில் விரிகிறது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் என இந்தியாவின் 4 மாகாணங்கள் மற்றும் பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானின் 2 மாகாணங்களில் விரிந்து  பரவி கிடக்கும். தார் பாலைவனத்தின் தொத்த பரப்பளவு 2 லட்சம் சதுர கி.மீட்டர். தார் பாலைவனத்தை ஆரவல்லி மலை சூழ்ந்திருக்கிறது. எனினும்,  ராஜஸ்தான் என்ற பெயருடன் மட்டுமே தார் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைகளுக்கு களம் அமைத்து தருவதும் தார்  பாலைவனம் தான் என்பது கூடுதல் தகவல்.

= வை.ரவீந்திரன்,
    புதுச்சேரி.

Saturday, 12 July 2014

மழையின் பரிமாணங்கள்

மழைத்துளி விழுந்து மண்ணின்
மணம் எழுந்ததால் எழுதினேன்!
ஜலதோஷம் பிடிக்கிறது என்றாலும்
குழந்தைக்கு நனைவதே பிடிக்கிறது

கூரையில் இருந்து வழியும்
மழையில் நனைந்த சுகம்
அடுக்கு மாடி கட்டிடத்தின்
சன்னல்களில் இல்லை

ஒவ்வொரு முதல் மழையிலும்
பாட்டியின் குரல் ஒலிக்கிறது
முதல் மழையில் நனையாதே
உடலுக்கு சுகவீனம் வரும்

இது மழைத்துளி அல்ல
சோர்வு வடுக்களை துடைத்தெறிய
மேகப்பஞ்சு நெய்து அனுப்பிய
மழைத் துணி!

= வை.ரவீந்திரன் 

Saturday, 21 June 2014

புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு



புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு

ஒவ்வொரு மனிதரையும் அடையாளம் காண்பதில் முகம் எவ்வளவு பங்கு வகிக்கிறதோ, அதே அளவிலான பங்கை முகவரி வகிக்கிறது. முகவரி என்பது சில வேளைகளில் சரித்திர பதிவுகளாகவும் மாறுகின்றன. அதுபோன்ற முகவரிக்கு முதுகு தண்டாக இருப்பது வீதி.

வீதிகளை அடையாளம் காண்பதற்கு பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நீடித்து வருகிறது. ஆனால், ஒருமுறை சூட்டப்பட்ட பெயர், நூற்றாண்டு கடந்து இருக்குமா என்பது சந்தேகமே? சென்னை மாநகரில் தமிழ் பெயர்களை சூட்டும் திட்டத்தினால் பல்வேறு வீதிகளின் பெயர்கள் மாற்றம் பெற்று விட்டன. அத்துடன் சாதி பெயர்களையும் நீக்கியதால் பாரம்பரியம் மிக்க வீதிகளும் கூட புதிய பெயரை ஆடையாக போர்த்தி நிற்கின்றன.

ஆனால், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள சில தெருக்களின் பெயர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே நீடித்து வருகின்றன. அதில் ஒன்று புஸ்சி வீதி. 

யார் அந்த புஸ்சி?

இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றிய டூப்ளக்ஸ், புதுச்சேரி கவர்னராக பதவி வகித்தபோது அவருடைய தளபதியாக இருந்தவர் புஸ்சி. 1747 முதல் 1754ம் ஆண்டு வரை டூப்ளக்ஸ் தலைமையில் பிரெஞ்சிந்திய தளபதியாக புஸ்சி இருந்தார். டூப்ளக்ஸ் காலத்துக்கு பின் 1783 முதல் 1785 வரை புதுச்சேரியில் கவர்னராகவும் இருந்துள்ளார்.

புஸ்சியின் வீரத்தினால் புதுச்சேரியில் இருந்து செஞ்சி, வந்தவாசி, தக்காணம் என பிரெஞ்சு எல்லை விரிவடைந்தது.  ‘எனக்கு இன்னும் ஒரு புஸ்சி கிடைத்திருந்தால் கர்நாடகத்தில் ஆங்கிலேயரை வேரறுத்து இருப்பேன்’ என டூப்ளக்ஸ் கூறிய வார்த்தைகளில் இருந்து புஸ்சியின் வீரத்தை அறியலாம். அதே நேரத்தில், புஸ்சி ஒரு மனித நேயர். ‘வெற்றிகளால் கிடைக்கும் விருதுகளை விட மனித உயிர் மிகவும் மதிப்பு மிக்கது’ என்பது புஸ்சி அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

அவரை பெருமை படுத்தும் வகையில் புதுச்சேரி நகரின் தென்பகுதியில் ஒரு வீதிக்கு அவரது பெயரை பிரெஞ்சியர் சூட்டினர். புதுச்சேரி பஸ் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் அந்த வீதி உள்ளது. புஸ்சி வீதியை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி புஸ்சி சட்டப்பேரவை தொகுதி ஒன்றும் சமீப காலம் வரை இருந்தது. தொகுதி சீரமைப்பின்போது அந்த தொகுதி மாறி விட்டது. எனினும், புஸ்சி வீதி அப்படியே இருக்கிறது.

பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்து காலனி ஆதிக்கத்தில் மின்னல் கீற்றாய் ஒளி வீசிய புஸ்சியின் இறுதி மூச்சு, புதுச்சேரி மண்ணில் தான் 1785ம் ஆண்டு அடங்கியது. கடற்கரையோரம் உள்ள கப்ஸ் கோயிலின் (புனித மேரி தேவாலயம்) தென் பகுதியில் புஸ்சி சமாதி உள்ளது.



ஊர் பெயரில் வீதிகள்

ஒரு நகரத்தை நோக்கி செல்லும் சாலையை அந்த நகரின் பெயரால் அழைப்பது வழக்கம். திருச்சி நெடுஞ்சாலை, மதுரை ரோடு இப்படி பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. ஆனால், புதுச்சேரி நகருக்குள் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை என வித்தியாசமான பெயர்களை காணலாம். இதற்கும் பிரெஞ்சியரே காரணம்

ஏற்கனவே கூறியபடி, புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் காலனி ஆதிக்கம் செலுத்த பிரெஞ்சியர் தீவிரம் காட்டி வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து 3 திசைகளிலும் அவர்களின் எல்லையை முடிந்த அளவுக்கு விரிவு படுத்தி சென்றனர். அதில் மேற்கு நோக்கிய அவர்களின் பயணத்துக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.
அதாவது செஞ்சி, ஆம்பூர், ஆற்காடு, வந்தவாசி என தொடங்கி கர்நாடகம் வரை பிரெஞ்சு ஆட்சி எல்லையை விரிவு படுத்தி வந்தனர். ஒவ்வொரு நகரையும் கைப்பற்றும்போது புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அதுபோன்று செஞ்சி மற்றும் ஆம்பூர் நகரங்களை கைப்பற்றிய தருணத்தில் அதை காலம் காலமாக நினைவு கூறும் வகையில் புதுச்சேரி தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு நூற்றாண்டை கடந்தும் பிரெஞ்சியர் சூட்டிய பெயர்கள் இன்றும் புதுச்சேரி வீதிகளில் நிலைத்து நிற்கிறது. 

= வை.ரவீந்திரன் 


Monday, 16 June 2014

கடவுளின் பூமி மாகே




மதுவுக்கும் பிரெஞ்சு கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற புதுச்சேரிக்கு மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான சிறப்பு உண்டு. இதன் 4 பிராந்தியங்களும் வெவ்வேறு இடங்களில்


பிரிந்து கிடக்கின்றன. புதுச்சேரியை தவிர்த்த மற்ற  பிராந்தியங்களான ஏனாம் ஆந்திராவிலும், காரைக்கால் தமிழகத்திலும், மாகே கேரளாவிலும் சிதறிக் கிடக்கிறது.

இதில் மாகே, கடவுளின் பூமி எனப்படும் கேரள மாநிலத்தின் அருகே அரபிக் கடலோரம் முத்துச் சிப்பியாய் கரை ஒதுங்கி கிடக்கும் எழில்மிகு நகரம்.  கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே குட்டி மல்லிகையாக மணம் பரப்பி நிற்கிறது. பசுஞ்சோலையாக பரவி கிடக்கும் மாகே நகரின் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர் மய்யழி. மய்யழி ஆற்று கரையோரம் இருந்ததால் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டது. மய்யழி எப்படி மாகே ஆனது என்பது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த கதை. 

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த பிரெஞ்சியரை சூரத்தில் இருந்து ஆங்கிலேயர் விரட்டியதால் 1720ம் ஆண்டு மய்யழி வந்து தஞ்சம் புகுந்தனர். அங்கு ஆட்சி செய்த படகரா மன்னர் அனுமதியோடு ஒரு கோட்டையை கட்டினர். ஆனால், ஆங்கிலேயரின் துரத்தல் தொடர்ந்தது. எனவே, பிரெஞ்சியரை காப்பாற்றுவதற்காக பிரான்சில் இருந்து வந்தார், கடற்படை தளபதி பிரான்சுவா மாகே லாபோர்தனே. ஆங்கிலேயரை அடக்கி பிரெஞ்சியர் நிரந்தரமாக தங்க வழி வகுத்து கொடுத்ததால் அவர் பெயரையே அந்த பகுதிக்கு பிரெஞ்சியர் சூட்டினர். இப்படித்தான் மய்யழி, மாகே ஆனது.

மலபார் கடற்கரைக்கே உரித்தான இளமை ததும்பும் அழகுடன் சுற்றுலா தலமாக ஜொலிக்கும் இன்றைய மாகே பகுதியில் கலங்கரை விளக்கம், மீன்பிடி துறைமுகம், தாகூர் பூங்கா என முக்கியமான இடங்களுடன் கோயில், தேவாலயம், மசூதி என ஏராளமான வழிபாட்டு தலங்களும் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரி அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மய்யழி ஆற்றின் கரையோரத்தில் walk way எனப்படும் நடைபாதை அமைக்கும் திட்டம், அதில் ஒன்று. 5 கோடி ரூபாய் செலவில் ஆற்றின் இரு கரைகளிலும் கற்களை பதித்து நடைபாதை அமைத்துள்ளனர். இந்த நடைபாதையில் மாலை நேரத்தில் ஆற்றங்கரையோரம் நடைபயில்வது அலாதியான அனுபவமாக இருக்கும். இது தவிர, மய்யழி ஆற்றில் படகு சவாரி செய்யவும் புதுச்சேரி சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. மாகே பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் இயங்கும் கட்டிடம் பிரெஞ்சியர் காலத்தில் கட்டப்பட்டது. அதை புனரமைப்பு செய்து சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை கேரள கரையோரம் சென்றால் பிரெஞ்சு, மலையாளம், தமிழ் கலந்து கதம்ப மணம் வீசும் மாகே பகுதியையும் கண்டு வரலாமே? 
••••••••••

ராபர்ட் கிளைவை வென்ற மாகே
==================================

மய்யழியில் ஆங்கிலேயரை ஒடுக்கிய பிறகு புதுச்சேரியில் நிரந்தரமாக தங்கி இருந்து பிரெஞ்சு எல்லையை விரிவு படுத்தும் பணியில் மாகே லாபோர்தனே ஈடுபட்டார். அப்போது நடந்த ஒரு போரில் இந்தியாவில் இன்றளவும் நினைவு கூறப்படும் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் இவரிடம் தோற்றுப்போய் சரண் அடைந்தார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். கிபி 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் இந்த சரித்திர அதிசயம் நிகழ்ந்தது.

புதுச்சேரியில் இருந்து சின்னஞ்சிறு படையுடன் கடல் மார்க்கமாக வந்து சென்னை நகரை மாகே கைப்பற்றினார். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படை மாகேயிடம் தோற்றுப்போனது. ஆனால், பிரெஞ்சு ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பதிலாக  ரூ.4 லட்சம் பவுண்டு பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பவும் ஆங்கிலேயரிடமே சென்னையை ஒப்படைத்தார், மாகே. இதனால், பின்னாளில் பிரான்சுக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டு ராஜ துரோக தண்டனை விதிக்கப்பட்டது.

= வை.ரவீந்திரன் 

Monday, 9 June 2014

ஆச்சரியமூட்டும் ஆயி மண்டபம்






மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்த பிறகும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனி அரசு முத்திரைகளை வைத்துள்ளன. முத்திரை என்பது அந்தந்த அரசுகளின் தனித்துவ அடையாளம். அந்த வரிசையில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் புண்ணிய பூமியாம் புதுச்சேரி மாநிலத்தின் அரச முத்திரையாக ஜொலிப்பது, ஆயி மண்டபம்.
புதுச்சேரி கடற்கரையோரத்தில் பாரதி பூங்காவின் நடு நாயகமாக வீற்றிருக்கும் வெள்ளை நிற ஆயி மண்டபத்துக்கு சுமார் 200 ஆண்டு கால நெடிய வரலாறு உண்டு. கிரேக்க ரோமானிய கட்டிடக் கலை கலந்து அழகுற கட்டி எழுப்பப்பட்டுள்ள ஆயி மண்டபம் எதற்காக கட்டப்பட்டது? இந்த மண்டபத்தை கட்டியவர் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை பின் தொடர்ந்து சென்றால் ஆச்சரியமான தகவல்கள் நம்மை வரவேற்று விழி விரிய செய்கின்றன.  
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் தேவதாசி தொழில் அதிகமாக இருந்தது. அப்போது, கோயிலுக்கென்றே தங்களை அர்ப்பணித்து உழவார பணிகளை செய்பவர்கள், செல்வந்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் எ பல்வேறு பிரிவினர் இருந்தனர். அதுபோன்ற இனத்தில் பிறந்த ஒரு பெண் தான் ஆயி. புதுச்சேரியை அடுத்த முத்தரையர் பாளையத்தில் 16ம் நூற்றாண்டில் மிகப் பெரிய மாளிகையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தவர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தனது மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு குளம் ஒன்றை வெட்டினார். அது தான் ஆயி குளம். புதுச்சேரியை அடுத்த முத்தரையார் பாளையத்தில் இன்றும் கூட ஆயி பெயரிலான அந்த குளத்தை காணலாம்.
ஆயி வாழ்ந்த காலத்தில் புதுச்சேரி எல்லை வரை கிருஷ்ண தேவராயரின் ஆட்சி பரவி இருந்தது. ஒருமுறை முத்தரையர் பாளையம் பகுதிக்கு அவர் நகர்வலம் வந்தபோது ஆயி உடன் மோதல் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக ஆயி வாழ்ந்த மாளிகையை இடித்து தள்ளி தரைமட்டமாக்க கிருஷ்ண தேவராயர் உத்தரவிட்டதாகவும் அதனால் மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தில் குளத்தை ஆயி வெட்டியதாகவும் செவி வழி கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரிக்குள் வலுவாக காலூன்றிய பிரெஞ்சியர், கடலோர பகுதியை கைப்பற்றி அங்கேயே நகரை நிர்மாணித்து வசிக்க துவங்கினர். கடலோரம் என்பதால் அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. 1850களில் இந்த பிரச்சினை பெரிதாக எதிரொலிக்க துவங்கியதும் பிரான்சில் ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனிடம் முறையிட்டனர். அப்போதைய புதுச்சேரி கவர்னர் போன்டெம்ப்ஸ் மூலமாக இந்த புகார் சென்றது.
உடனே, தனது தலைமை பொறியாளர் லாமைரெஸ்சே என்பவரை புதுச்சேரிக்கு நெப்போலியன் அனுப்பி வைத்தார். அவரோ, புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் எங்காவது நல்ல குடிநீர் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது லாமைரெஸ்சே கண்ணில் பட்டது, ஆயி குளம். அங்கிருந்தே நகருக்குள் குடிநீர் கொண்டு வரலாம் என லாமைரெஸ்செ தீர்மானித்தார். அதன்படி, அங்கிருந்து புதுச்சேரி நகருக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது அந்த வாய்க்கால் வழியாக வந்த நீரை தேக்கி வைத்த இடம் தான் இப்போதைய பாரதி பூங்கா. அங்கிருந்தே நகருக்குள் வசித்த பிரெஞ்சியருக்கு தண்ணீர் விநியோகம் துவங்கியது.
புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு தண்ணீர் பிரச்சினை நீங்கிய தகவலையும் லாமைரெஸ்சே பணியையும் பாராட்டி மூன்றாம் நெப்போலியனுக்கு கவர்னர் போன்டெம்ப்ஸ் கடிதம் அனுப்பினார். அதில், லாமைரெஸ்சேயை கவுரவிக்கும் வகையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நெப்போலியனோ, முழு விவரத்தையும் கேட்டதோடு புதுச்சேரி அருகிலேயே அருமையான குளம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னணியையும் விசாரித்தார்.
தாசி குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த எண்ணத்துடன் இருந்த ஆயி குணம் அவரை கவர்ந்தது. எனவே, அவள் நினைவாகவே ஒரு நினைவு சிக்கம் எழுப்பலாமே என முடிவு செய்தார். அதன் விளைவாக, ‘ஆயி என்ற தாசிப் பெண்ணின் நல்ல மனதை கவுரவிக்கும் வகையில் அவள் நினைவாக ஒரு மண்டபம் எழுப்புங்கள்’ என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவால் எழுந்ததே ஆயி மண்டபம்.
கிரேக்க-ரோமானிய கட்டடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் அந்த மண்டபம், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் ஆட்சி செய்த கி.பி.1852-1870 காலத்தில் கட்டப்பட்டது. புதுச்சேரி மக்களின் குடிநீர் தேவைக்காக குளம் வெட்டிய ஆயி என்ற தாசிப் பெண்ணுக்கு  எங்கிருந்தோ வந்த பிரெஞ்சியர் கவுரவம் அளித்த நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி அரசும் அந்த மண்டபத்தை அரசு சின்னமாக்கி மேலும் பெருமை படுத்தியது. புதுச்சேரி வரும் மக்களை வரவேற்றபடி, இரண்டு நூற்றாண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிப்புடன் வரவேற்கிறது, ஆயி மண்டபம். 

= வை.ரவீந்திரன் 

Sunday, 30 March 2014

புதுவையின் பழமை - நூல்


‘புதுவையின் பழமை என்ற புத்தகம் 
புதுச்சேரி பற்றிய நல்ல தொகுப்பு
மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்
எளிய நடையில் தகவல்களை கூறுகிறது’


திறனாய்வு விழாவில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.


உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மல்லிகை மணம் அலாதியானது அதுபோல உருவத்தில் சுருங்கி கிடந்தாலும் புதுச்சேரியின் பிரெஞ்சு மணம் தனித்துவம் நிறைந்தது.

சிறப்பு வாய்ந்த புதுவை மாநிலத்தின் அரசு சின்னமான ஆயி மண்டபத்தின் பின்னணி என்ன  ஆயி என்பது யார் அந்த மண்டபத்துக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் உள்ள தொடர்பு என்ன?

 புதுவையில் உள்ள ஆயிரம் ஆண்டு அதிசயம் புதுவையின் அடையாளமான மணக்குள விநாயகரின் அதிசயிக்க வைக்கும் கதை

புதுச்சேரி தேவாலயங்களின் பிரெஞ்சு பின்னணி அவற்றை கட்டி எழுப்பியவர்கள் யார் யார்

இந்தியாவை பிரெஞ்சு சாம்ராஜ்யமாக மாற்ற நினைத்து புயலாக புறப்பட்ட டூப்ளக்ஸ் புதுவைக்குள் மடங்கி போன கதை

அவரால் கட்டப்பட்ட கவர்னர் மாளிகையின் நூற்றாண்டுகளை கடந்த வரலாறு

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை போலவே புதுவையில் பிரெஞ்சியர் கட்டிய கோட்டை

கடலுக்குள் ஒரு கி மீ வரை அமைத்த ரயில்பாதை

நூற்றாண்டுகளை கடந்த புதுச்சேரி பள்ளிகள் அவற்றை தொடங்கியாவர்கள் வரலாறுடன்

பதுச்சேரி கல்லறை தோட்டங்களுக்கு கூட நீண்ட பழம் பெருமை உண்டு
காரைக்கால் மாகி யேனம் என பிரிந்து கிடக்கும் மாநிலத்தின ரகசியம்

இதுபோன்ற பல்வேறு அரிய தகவல் களஞ்சியம்

கிடைத்தற்கு அரிதான படங்களுடன் எளிமை நடையில் புதுவை வரலாறு
 புதுவையின் பழமை

எனது எழுத்தில் உருவான புத்தம் புதிய புத்தகம்

சூரியன் பதிப்பகம் வெளியீடு











Tuesday, 6 August 2013

ஆசிரியர் தின கவிதை.


 அன்னையின் தாலாட்டில் 
கண்ணிலோ நித்திரை
உங்களுடைய தாலாட்டில்
பதித்ததோ முத்திரை

தந்தையின் வழிகாட்டுதலில்
சந்தைக்கு பயணம்
உங்களுடைய வழிகாட்டுதலில்
வாழ்க்கைப் பயணம்

நண்பனின் அரவணைப்பில்
கண்டதோ சகோதரத்துவம்
உங்களுடைய அரவணைப்பில் 
வென்றதோ முதலிடம்

கல்லும் கலையாமல்
சிலையும் சிதறாமல்
சிற்பமாய் செதுக்கினீர்
எம்மை

கை குவித்து வணங்குகிறேன்
மாதா பிதா குரு என
ஓருருவாய் திகளும்
உம்மை.

= வை.ரவீந்திரன்