புதுச்சேரி என்றாலே மருத்துவம், கல்வி இரண்டுக்கும் பிரசித்தம் என்று கூறுவது உண்டு. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். மிகச் சிறிய மைதானம், வகுப்பு அறையிலேயே மதிய உணவு என சென்ற சென்னை பள்ளி வாழ்க்கையில் இருந்து புதுச்சேரியில் நான்கு ஆண்டு பள்ளி அனுபவம் வித்தியாசமாகவே அமைந்தது எனது செல்வங்(ன்)களுக்கு.
பரந்து விரிந்த மைதானம், மைதானத்தில் நண்பர்களுடன் மதிய உணவு, ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா, ஆசிரியர் தினம் முதற்கொண்டு ஒவ்வொன்றுக்கும் விழா, கெட் டுகதர் போல முதல்வராக இருக்கும் ரெவ்.பாதரே மாணவர்களுடன் உரையாடி திரைப் பாடல்களை பாடி மகிழ்வது (விழா தினத்தில் மட்டும்) … என அந்த கொண்டாட்டங்கள் வேறுபட்ட அனுபவம்... கொண்டாட்டங்களுக்கான பூமி புதுச்சேரி என்பதை டான்பாஸ்கோ பள்ளியிலும் உணர முடிந்தது.
எந்தவொரு இடத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை அமைந்தாலே போதும், நம்முடைய பணிகளும் முன்னேற்றமும் தானாகவே விரிந்து உயரும். அங்கு பள்ளிக் கல்வியும் அப்படித்தான். தமிழகத்தை ஒப்பிட்டால் பள்ளிக் கல்வியில் புதுச்சேரி ஒரு படி மேல் என்பது எனது எண்ணம்.
நகருக்குள் மட்டும் மூன்று அரசு மருத்துவமனைகள், அரசு மகப்பேறு மருத்துவமனை, சுற்றிலும் ஏழு மருத்துவ கல்லூரிகள் புறநகர் பகுதிகளில் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சுகாதார வசதியில் புதுச்சேரி கொஞ்சம் உயர்வாகவே உள்ளது. அதனால், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு சந்தேகம் இல்லை. சொந்த ஊரில் முடக்குவாதத்தால் முடங்கிய என்னுடைய தந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையையும் மறக்க முடியாது. அங்கு உள் நோயாளியாக சேர்ப்பதற்கு பெரிதும் உதவிய நண்பர் ஆதி கேசவன், மருத்துவமனை டீன் (பொறுப்பு) பாலச்சந்திரன் ஆகியோரின் உதவிகளை நன்றி என்ற மூன்று எழுத்துகளில் அடக்க முடியாது.
புதுச்சேரியை சுற்றிலும் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டம் வரையிலான தமிழக மக்களுக்கும் ஜிப்மர் மருத்துவமனை தான் ஆபத்பாந்தவன் என்பது மிகையான வார்த்தை கிடையாது. எனினும், ஓபன் ஹார்ட் சர்ஜரி போன்ற சில மிகவும் சிக்கலான சிகிச்சைக்கு புதுச்சேரி இன்னமும் பக்குவப்படவில்லை. அதுபோன்ற சிகிச்சைக்கு சென்னை வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதில், ஆட்சியாளர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிக்குள்ளான என்னுடன் பணியாற்றிய மூத்த ஊழியர் மோகன்ராஜ் சாரின் அனுபவமே அதற்கு சான்று.
அதற்காக அரசு மருத்துவமனையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து கூற முடியாது. எக்ஸ் ரே எடுப்பதில் தொடங்கி ஒவ்வொரு சிகிச்சை முறைகளையும் பார்க்கும்போது, தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவமனைகளை விட கொஞ்சம் நல்ல மாதிரியாகவே அணுகுமுறைகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட சிகிச்சை சரியில்லை என்றால் உடனடியாக போராட்டமும், முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
(அனுபவங்கள் இனிக்கும்….)
No comments:
Post a Comment