Saturday 22 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 8

மண்ணின் மைந்தர் என்ற உணர்வு, புதுச்சேரி மக்களின் மனதில் மிக ஆழமாகவே புதைந்து கிடக்கிறது. வெளிமாநிலங்களில் (தமிழக மக்களும் தான்…) இருந்து குடியேறும் மக்களால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் வாய்ப்புகள் தட்டிப் போவதாகவும் கருதுகின்றனர். அரசு கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரே இதுபோன்ற கருத்தை முகநூலில் எழுதினார் என்றால் சாதாரண மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியத்தை கூடவேறுபாட்டுடனேயே புதுச்சேரி மக்கள் பார்ப்பதை காண முடிகிறது. இனப்பற்றும் கூட, பரவலாக இருக்கிறது.

புதுச்சேரியில், எளிதில் ரேஷன் அட்டை பெற முடிவதில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. தமிழகத்தில் டெலிட் செய்த சான்றிதழ், கேஸ் இணைப்பு, வாடகை வீட்டு ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களோடு விண்ணப்பித்தும் கூட 10 மாதங்கள் கழித்தே ரேஷன் அட்டை கிடைத்தது. ஜூனில் விண்ணப்பித்த எனக்கு மறு ஆண்டு மார்ச்சில்தான் ரேஷன் கார்டு வந்தது. சிவில் சப்ளைஸ் இணை இயக்குநரை நேரில் பார்த்து முறையிட்டும் இந்த நிலைமை. ஆனால், தமிழகம் திரும்பிய போது காலையில் சரண்டர் செய்த கார்டுக்கு மாலையிலேயே சான்றிதழ் தந்து விட்டனர். அவ்வளவு வேகம்…

சென்னையில் ஜூன் இறுதியில் விண்ணப்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் ரேஷன் அட்டையை பெற்றதோடு அக்டோபர் முதல் பொருட்களை வாங்க தொடங்கி விட்டேன் என்பதையும் இங்கு நினைவு கூறுகிறேன். இவ்வளவுக்கும் புதுச்சேரி ரேஷன் கடைகளில் சர்க்கரை விநியோகம் இல்லை. மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி, கோதுமை மட்டும் உண்டு. அதுவும் முறையாக வழங்குவது கிடையாது. ஜனவரி மாதத்துக்கான அரிசி என கூறிக் கொண்டு ஜூலை மாதம் விநியோகிப்பார்கள்.

அங்குள்ள மக்களின் உச்சபட்ச லட்சியம், பிரான்ஸ் குடியுரிமை பெறுவதே. 58 வயதுக்கு பிறகு பிரான்ஸ் அரசிடம் இருந்து சில ஆயிரம் பிராங்கோ (இந்திய மதிப்பில் ஒரு பிராங்கோ சுமார் 60 ரூபாய்) பென்சன் கிடைக்கும். இப்போதெல்லாம், குடியுரிமைக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மணமகன், மணமகளுக்கு கடும் கிராக்கி. பிறக்க போகும் குழந்தைக்கு தானாகவே பிரெஞ்சு குடியுரிமை கிடைத்து விடும். புதுச்சேரி அரசே கூட, 55 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் பென்சனாக 5 ஆயிரம் வரை வழங்குகிறது.

(அனுபவம் இனிக்கும்…)

No comments: