Saturday, 21 June 2014

புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு



புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு

ஒவ்வொரு மனிதரையும் அடையாளம் காண்பதில் முகம் எவ்வளவு பங்கு வகிக்கிறதோ, அதே அளவிலான பங்கை முகவரி வகிக்கிறது. முகவரி என்பது சில வேளைகளில் சரித்திர பதிவுகளாகவும் மாறுகின்றன. அதுபோன்ற முகவரிக்கு முதுகு தண்டாக இருப்பது வீதி.

வீதிகளை அடையாளம் காண்பதற்கு பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நீடித்து வருகிறது. ஆனால், ஒருமுறை சூட்டப்பட்ட பெயர், நூற்றாண்டு கடந்து இருக்குமா என்பது சந்தேகமே? சென்னை மாநகரில் தமிழ் பெயர்களை சூட்டும் திட்டத்தினால் பல்வேறு வீதிகளின் பெயர்கள் மாற்றம் பெற்று விட்டன. அத்துடன் சாதி பெயர்களையும் நீக்கியதால் பாரம்பரியம் மிக்க வீதிகளும் கூட புதிய பெயரை ஆடையாக போர்த்தி நிற்கின்றன.

ஆனால், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள சில தெருக்களின் பெயர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே நீடித்து வருகின்றன. அதில் ஒன்று புஸ்சி வீதி. 

யார் அந்த புஸ்சி?

இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றிய டூப்ளக்ஸ், புதுச்சேரி கவர்னராக பதவி வகித்தபோது அவருடைய தளபதியாக இருந்தவர் புஸ்சி. 1747 முதல் 1754ம் ஆண்டு வரை டூப்ளக்ஸ் தலைமையில் பிரெஞ்சிந்திய தளபதியாக புஸ்சி இருந்தார். டூப்ளக்ஸ் காலத்துக்கு பின் 1783 முதல் 1785 வரை புதுச்சேரியில் கவர்னராகவும் இருந்துள்ளார்.

புஸ்சியின் வீரத்தினால் புதுச்சேரியில் இருந்து செஞ்சி, வந்தவாசி, தக்காணம் என பிரெஞ்சு எல்லை விரிவடைந்தது.  ‘எனக்கு இன்னும் ஒரு புஸ்சி கிடைத்திருந்தால் கர்நாடகத்தில் ஆங்கிலேயரை வேரறுத்து இருப்பேன்’ என டூப்ளக்ஸ் கூறிய வார்த்தைகளில் இருந்து புஸ்சியின் வீரத்தை அறியலாம். அதே நேரத்தில், புஸ்சி ஒரு மனித நேயர். ‘வெற்றிகளால் கிடைக்கும் விருதுகளை விட மனித உயிர் மிகவும் மதிப்பு மிக்கது’ என்பது புஸ்சி அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

அவரை பெருமை படுத்தும் வகையில் புதுச்சேரி நகரின் தென்பகுதியில் ஒரு வீதிக்கு அவரது பெயரை பிரெஞ்சியர் சூட்டினர். புதுச்சேரி பஸ் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் அந்த வீதி உள்ளது. புஸ்சி வீதியை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி புஸ்சி சட்டப்பேரவை தொகுதி ஒன்றும் சமீப காலம் வரை இருந்தது. தொகுதி சீரமைப்பின்போது அந்த தொகுதி மாறி விட்டது. எனினும், புஸ்சி வீதி அப்படியே இருக்கிறது.

பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்து காலனி ஆதிக்கத்தில் மின்னல் கீற்றாய் ஒளி வீசிய புஸ்சியின் இறுதி மூச்சு, புதுச்சேரி மண்ணில் தான் 1785ம் ஆண்டு அடங்கியது. கடற்கரையோரம் உள்ள கப்ஸ் கோயிலின் (புனித மேரி தேவாலயம்) தென் பகுதியில் புஸ்சி சமாதி உள்ளது.



ஊர் பெயரில் வீதிகள்

ஒரு நகரத்தை நோக்கி செல்லும் சாலையை அந்த நகரின் பெயரால் அழைப்பது வழக்கம். திருச்சி நெடுஞ்சாலை, மதுரை ரோடு இப்படி பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. ஆனால், புதுச்சேரி நகருக்குள் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை என வித்தியாசமான பெயர்களை காணலாம். இதற்கும் பிரெஞ்சியரே காரணம்

ஏற்கனவே கூறியபடி, புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் காலனி ஆதிக்கம் செலுத்த பிரெஞ்சியர் தீவிரம் காட்டி வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து 3 திசைகளிலும் அவர்களின் எல்லையை முடிந்த அளவுக்கு விரிவு படுத்தி சென்றனர். அதில் மேற்கு நோக்கிய அவர்களின் பயணத்துக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.
அதாவது செஞ்சி, ஆம்பூர், ஆற்காடு, வந்தவாசி என தொடங்கி கர்நாடகம் வரை பிரெஞ்சு ஆட்சி எல்லையை விரிவு படுத்தி வந்தனர். ஒவ்வொரு நகரையும் கைப்பற்றும்போது புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அதுபோன்று செஞ்சி மற்றும் ஆம்பூர் நகரங்களை கைப்பற்றிய தருணத்தில் அதை காலம் காலமாக நினைவு கூறும் வகையில் புதுச்சேரி தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு நூற்றாண்டை கடந்தும் பிரெஞ்சியர் சூட்டிய பெயர்கள் இன்றும் புதுச்சேரி வீதிகளில் நிலைத்து நிற்கிறது. 

= வை.ரவீந்திரன் 


Monday, 16 June 2014

கடவுளின் பூமி மாகே




மதுவுக்கும் பிரெஞ்சு கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற புதுச்சேரிக்கு மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான சிறப்பு உண்டு. இதன் 4 பிராந்தியங்களும் வெவ்வேறு இடங்களில்


பிரிந்து கிடக்கின்றன. புதுச்சேரியை தவிர்த்த மற்ற  பிராந்தியங்களான ஏனாம் ஆந்திராவிலும், காரைக்கால் தமிழகத்திலும், மாகே கேரளாவிலும் சிதறிக் கிடக்கிறது.

இதில் மாகே, கடவுளின் பூமி எனப்படும் கேரள மாநிலத்தின் அருகே அரபிக் கடலோரம் முத்துச் சிப்பியாய் கரை ஒதுங்கி கிடக்கும் எழில்மிகு நகரம்.  கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே குட்டி மல்லிகையாக மணம் பரப்பி நிற்கிறது. பசுஞ்சோலையாக பரவி கிடக்கும் மாகே நகரின் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர் மய்யழி. மய்யழி ஆற்று கரையோரம் இருந்ததால் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டது. மய்யழி எப்படி மாகே ஆனது என்பது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த கதை. 

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த பிரெஞ்சியரை சூரத்தில் இருந்து ஆங்கிலேயர் விரட்டியதால் 1720ம் ஆண்டு மய்யழி வந்து தஞ்சம் புகுந்தனர். அங்கு ஆட்சி செய்த படகரா மன்னர் அனுமதியோடு ஒரு கோட்டையை கட்டினர். ஆனால், ஆங்கிலேயரின் துரத்தல் தொடர்ந்தது. எனவே, பிரெஞ்சியரை காப்பாற்றுவதற்காக பிரான்சில் இருந்து வந்தார், கடற்படை தளபதி பிரான்சுவா மாகே லாபோர்தனே. ஆங்கிலேயரை அடக்கி பிரெஞ்சியர் நிரந்தரமாக தங்க வழி வகுத்து கொடுத்ததால் அவர் பெயரையே அந்த பகுதிக்கு பிரெஞ்சியர் சூட்டினர். இப்படித்தான் மய்யழி, மாகே ஆனது.

மலபார் கடற்கரைக்கே உரித்தான இளமை ததும்பும் அழகுடன் சுற்றுலா தலமாக ஜொலிக்கும் இன்றைய மாகே பகுதியில் கலங்கரை விளக்கம், மீன்பிடி துறைமுகம், தாகூர் பூங்கா என முக்கியமான இடங்களுடன் கோயில், தேவாலயம், மசூதி என ஏராளமான வழிபாட்டு தலங்களும் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரி அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மய்யழி ஆற்றின் கரையோரத்தில் walk way எனப்படும் நடைபாதை அமைக்கும் திட்டம், அதில் ஒன்று. 5 கோடி ரூபாய் செலவில் ஆற்றின் இரு கரைகளிலும் கற்களை பதித்து நடைபாதை அமைத்துள்ளனர். இந்த நடைபாதையில் மாலை நேரத்தில் ஆற்றங்கரையோரம் நடைபயில்வது அலாதியான அனுபவமாக இருக்கும். இது தவிர, மய்யழி ஆற்றில் படகு சவாரி செய்யவும் புதுச்சேரி சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. மாகே பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் இயங்கும் கட்டிடம் பிரெஞ்சியர் காலத்தில் கட்டப்பட்டது. அதை புனரமைப்பு செய்து சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை கேரள கரையோரம் சென்றால் பிரெஞ்சு, மலையாளம், தமிழ் கலந்து கதம்ப மணம் வீசும் மாகே பகுதியையும் கண்டு வரலாமே? 
••••••••••

ராபர்ட் கிளைவை வென்ற மாகே
==================================

மய்யழியில் ஆங்கிலேயரை ஒடுக்கிய பிறகு புதுச்சேரியில் நிரந்தரமாக தங்கி இருந்து பிரெஞ்சு எல்லையை விரிவு படுத்தும் பணியில் மாகே லாபோர்தனே ஈடுபட்டார். அப்போது நடந்த ஒரு போரில் இந்தியாவில் இன்றளவும் நினைவு கூறப்படும் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் இவரிடம் தோற்றுப்போய் சரண் அடைந்தார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். கிபி 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் இந்த சரித்திர அதிசயம் நிகழ்ந்தது.

புதுச்சேரியில் இருந்து சின்னஞ்சிறு படையுடன் கடல் மார்க்கமாக வந்து சென்னை நகரை மாகே கைப்பற்றினார். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படை மாகேயிடம் தோற்றுப்போனது. ஆனால், பிரெஞ்சு ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பதிலாக  ரூ.4 லட்சம் பவுண்டு பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பவும் ஆங்கிலேயரிடமே சென்னையை ஒப்படைத்தார், மாகே. இதனால், பின்னாளில் பிரான்சுக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டு ராஜ துரோக தண்டனை விதிக்கப்பட்டது.

= வை.ரவீந்திரன் 

Monday, 9 June 2014

ஆச்சரியமூட்டும் ஆயி மண்டபம்






மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்த பிறகும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனி அரசு முத்திரைகளை வைத்துள்ளன. முத்திரை என்பது அந்தந்த அரசுகளின் தனித்துவ அடையாளம். அந்த வரிசையில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் புண்ணிய பூமியாம் புதுச்சேரி மாநிலத்தின் அரச முத்திரையாக ஜொலிப்பது, ஆயி மண்டபம்.
புதுச்சேரி கடற்கரையோரத்தில் பாரதி பூங்காவின் நடு நாயகமாக வீற்றிருக்கும் வெள்ளை நிற ஆயி மண்டபத்துக்கு சுமார் 200 ஆண்டு கால நெடிய வரலாறு உண்டு. கிரேக்க ரோமானிய கட்டிடக் கலை கலந்து அழகுற கட்டி எழுப்பப்பட்டுள்ள ஆயி மண்டபம் எதற்காக கட்டப்பட்டது? இந்த மண்டபத்தை கட்டியவர் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை பின் தொடர்ந்து சென்றால் ஆச்சரியமான தகவல்கள் நம்மை வரவேற்று விழி விரிய செய்கின்றன.  
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் தேவதாசி தொழில் அதிகமாக இருந்தது. அப்போது, கோயிலுக்கென்றே தங்களை அர்ப்பணித்து உழவார பணிகளை செய்பவர்கள், செல்வந்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் எ பல்வேறு பிரிவினர் இருந்தனர். அதுபோன்ற இனத்தில் பிறந்த ஒரு பெண் தான் ஆயி. புதுச்சேரியை அடுத்த முத்தரையர் பாளையத்தில் 16ம் நூற்றாண்டில் மிகப் பெரிய மாளிகையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தவர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தனது மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு குளம் ஒன்றை வெட்டினார். அது தான் ஆயி குளம். புதுச்சேரியை அடுத்த முத்தரையார் பாளையத்தில் இன்றும் கூட ஆயி பெயரிலான அந்த குளத்தை காணலாம்.
ஆயி வாழ்ந்த காலத்தில் புதுச்சேரி எல்லை வரை கிருஷ்ண தேவராயரின் ஆட்சி பரவி இருந்தது. ஒருமுறை முத்தரையர் பாளையம் பகுதிக்கு அவர் நகர்வலம் வந்தபோது ஆயி உடன் மோதல் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக ஆயி வாழ்ந்த மாளிகையை இடித்து தள்ளி தரைமட்டமாக்க கிருஷ்ண தேவராயர் உத்தரவிட்டதாகவும் அதனால் மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தில் குளத்தை ஆயி வெட்டியதாகவும் செவி வழி கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரிக்குள் வலுவாக காலூன்றிய பிரெஞ்சியர், கடலோர பகுதியை கைப்பற்றி அங்கேயே நகரை நிர்மாணித்து வசிக்க துவங்கினர். கடலோரம் என்பதால் அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. 1850களில் இந்த பிரச்சினை பெரிதாக எதிரொலிக்க துவங்கியதும் பிரான்சில் ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனிடம் முறையிட்டனர். அப்போதைய புதுச்சேரி கவர்னர் போன்டெம்ப்ஸ் மூலமாக இந்த புகார் சென்றது.
உடனே, தனது தலைமை பொறியாளர் லாமைரெஸ்சே என்பவரை புதுச்சேரிக்கு நெப்போலியன் அனுப்பி வைத்தார். அவரோ, புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் எங்காவது நல்ல குடிநீர் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது லாமைரெஸ்சே கண்ணில் பட்டது, ஆயி குளம். அங்கிருந்தே நகருக்குள் குடிநீர் கொண்டு வரலாம் என லாமைரெஸ்செ தீர்மானித்தார். அதன்படி, அங்கிருந்து புதுச்சேரி நகருக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது அந்த வாய்க்கால் வழியாக வந்த நீரை தேக்கி வைத்த இடம் தான் இப்போதைய பாரதி பூங்கா. அங்கிருந்தே நகருக்குள் வசித்த பிரெஞ்சியருக்கு தண்ணீர் விநியோகம் துவங்கியது.
புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு தண்ணீர் பிரச்சினை நீங்கிய தகவலையும் லாமைரெஸ்சே பணியையும் பாராட்டி மூன்றாம் நெப்போலியனுக்கு கவர்னர் போன்டெம்ப்ஸ் கடிதம் அனுப்பினார். அதில், லாமைரெஸ்சேயை கவுரவிக்கும் வகையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நெப்போலியனோ, முழு விவரத்தையும் கேட்டதோடு புதுச்சேரி அருகிலேயே அருமையான குளம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னணியையும் விசாரித்தார்.
தாசி குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த எண்ணத்துடன் இருந்த ஆயி குணம் அவரை கவர்ந்தது. எனவே, அவள் நினைவாகவே ஒரு நினைவு சிக்கம் எழுப்பலாமே என முடிவு செய்தார். அதன் விளைவாக, ‘ஆயி என்ற தாசிப் பெண்ணின் நல்ல மனதை கவுரவிக்கும் வகையில் அவள் நினைவாக ஒரு மண்டபம் எழுப்புங்கள்’ என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவால் எழுந்ததே ஆயி மண்டபம்.
கிரேக்க-ரோமானிய கட்டடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் அந்த மண்டபம், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் ஆட்சி செய்த கி.பி.1852-1870 காலத்தில் கட்டப்பட்டது. புதுச்சேரி மக்களின் குடிநீர் தேவைக்காக குளம் வெட்டிய ஆயி என்ற தாசிப் பெண்ணுக்கு  எங்கிருந்தோ வந்த பிரெஞ்சியர் கவுரவம் அளித்த நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி அரசும் அந்த மண்டபத்தை அரசு சின்னமாக்கி மேலும் பெருமை படுத்தியது. புதுச்சேரி வரும் மக்களை வரவேற்றபடி, இரண்டு நூற்றாண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிப்புடன் வரவேற்கிறது, ஆயி மண்டபம். 

= வை.ரவீந்திரன் 

Sunday, 30 March 2014

புதுவையின் பழமை - நூல்


‘புதுவையின் பழமை என்ற புத்தகம் 
புதுச்சேரி பற்றிய நல்ல தொகுப்பு
மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்
எளிய நடையில் தகவல்களை கூறுகிறது’


திறனாய்வு விழாவில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.


உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மல்லிகை மணம் அலாதியானது அதுபோல உருவத்தில் சுருங்கி கிடந்தாலும் புதுச்சேரியின் பிரெஞ்சு மணம் தனித்துவம் நிறைந்தது.

சிறப்பு வாய்ந்த புதுவை மாநிலத்தின் அரசு சின்னமான ஆயி மண்டபத்தின் பின்னணி என்ன  ஆயி என்பது யார் அந்த மண்டபத்துக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் உள்ள தொடர்பு என்ன?

 புதுவையில் உள்ள ஆயிரம் ஆண்டு அதிசயம் புதுவையின் அடையாளமான மணக்குள விநாயகரின் அதிசயிக்க வைக்கும் கதை

புதுச்சேரி தேவாலயங்களின் பிரெஞ்சு பின்னணி அவற்றை கட்டி எழுப்பியவர்கள் யார் யார்

இந்தியாவை பிரெஞ்சு சாம்ராஜ்யமாக மாற்ற நினைத்து புயலாக புறப்பட்ட டூப்ளக்ஸ் புதுவைக்குள் மடங்கி போன கதை

அவரால் கட்டப்பட்ட கவர்னர் மாளிகையின் நூற்றாண்டுகளை கடந்த வரலாறு

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை போலவே புதுவையில் பிரெஞ்சியர் கட்டிய கோட்டை

கடலுக்குள் ஒரு கி மீ வரை அமைத்த ரயில்பாதை

நூற்றாண்டுகளை கடந்த புதுச்சேரி பள்ளிகள் அவற்றை தொடங்கியாவர்கள் வரலாறுடன்

பதுச்சேரி கல்லறை தோட்டங்களுக்கு கூட நீண்ட பழம் பெருமை உண்டு
காரைக்கால் மாகி யேனம் என பிரிந்து கிடக்கும் மாநிலத்தின ரகசியம்

இதுபோன்ற பல்வேறு அரிய தகவல் களஞ்சியம்

கிடைத்தற்கு அரிதான படங்களுடன் எளிமை நடையில் புதுவை வரலாறு
 புதுவையின் பழமை

எனது எழுத்தில் உருவான புத்தம் புதிய புத்தகம்

சூரியன் பதிப்பகம் வெளியீடு











Tuesday, 6 August 2013

ஆசிரியர் தின கவிதை.


 அன்னையின் தாலாட்டில் 
கண்ணிலோ நித்திரை
உங்களுடைய தாலாட்டில்
பதித்ததோ முத்திரை

தந்தையின் வழிகாட்டுதலில்
சந்தைக்கு பயணம்
உங்களுடைய வழிகாட்டுதலில்
வாழ்க்கைப் பயணம்

நண்பனின் அரவணைப்பில்
கண்டதோ சகோதரத்துவம்
உங்களுடைய அரவணைப்பில் 
வென்றதோ முதலிடம்

கல்லும் கலையாமல்
சிலையும் சிதறாமல்
சிற்பமாய் செதுக்கினீர்
எம்மை

கை குவித்து வணங்குகிறேன்
மாதா பிதா குரு என
ஓருருவாய் திகளும்
உம்மை.

= வை.ரவீந்திரன் 




Tuesday, 22 November 2011

குழந்தைகள் தினக் கவிதை

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

பேதம் பார்த்து எங்களை வெறுக்காதீர்கள்
எங்களின் எதிர்கால கனவுகளை சிதைக்காதீர்கள்
அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றாதீர்கள்
நாளைய தலைவர்களான எங்களை தடுக்காதீர்கள்& ஏனெனில்

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

அற்ப வெற்றிக்காக திறமைகளுக்கு திரையிடாதீர்கள்
உங்களின் அச்சத்தில் உண்மையை மறைக்காதீர்கள்
மகிழ்ச்சி என்னும் வாகனமாக எங்களை கருதாதீர்கள்
உங்களின் தவறுகளுக்கு எங்களை கண்டிக்காதீர்கள் & ஏனெனில்

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

நாங்கள் உங்களுடைய நம்பிக்கை; உங்களின் எதிர்காலம்
ஊழ்வினையையும் மாற்ற முடியும் எங்களால் & ஆனால்
உங்களின் உதவியின்றி எதுவும் சாத்தியமல்ல ஏனெனில்
நாங்கள் குழந்தைகள். கடவுளின் அன்பு பரிசு

= வை.ரவீந்திரன் 

Sunday, 6 November 2011

மாறிய மனம்

மாறிய மனம்
=========
= வை.ரவீந்திரன்

அப்போது எனக்கு 5 வயது இருக்கும், வீட்டில் அனைவருக்கும் நான் தான் செல்லப் பிள்ளை. செல்லப் பிள்ளை என்றாலே பாசத்தோடு தடைகளும் இருப்பது வழக்கம் தானே. போக்குவரத்து என்பதையே சிறிதும் அறிந்திராத அந்த சிறிய தெருவில் நான் இறங்குவதற்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனக்கு வெளி உலகை அறிமுகம் செய்து வைத்தது வீட்டின் ஜன்னல் தான். என்னை விட உயரமாக இருந்ததால் நாற்காலி அல்லது ஏதாவது ஒரு பலகையை எடுத்து வந்து அதன் மீது நின்றபடி, ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு நிற்பது எனது வாடிக்கை. அதன் வழியாகவே, எனது வெளி உலகம் தொடங்கியது.

சுட்டெரிக்கும் நண்பகலுக்கு சற்று முந்தைய, அமைதியான முற்பகல் பொழுதை நீங்கள் கவனித்து பார்த்திருக்கிறீர்களா? நான் அனுபவித்து பார்த்திருக்கிறேன். அந்த அமைதியும் குருவிகளின் கீச்சொலிகளுமே எனது நண்பர்கள். அந்த சமயத்தில் பரவி நிற்கும் வெயிலின் அழகு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

சற்று வளர்ந்த பிறகு, தெருவில் செல்லவும் மற்ற குழந்தைகளுடன் அளவளாவவும் எனக்கு சிறிது சுதந்திரம் கிடைத்தது. வெளியூர்களில் இருந்து ஊருக்குள் வந்து பொருட்களை விற்பனை செய்யும் ஒவ்வொருத்தரையும் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஏக்கம் முளை விடும். ஊர் ஊராக சுற்றி திரிவதை என்னை அறியாமலேயே ஆர்வத்துடன் விரும்பத் தொடங்கினேன்.

பின்னிரவு நேரத்தில் குறி சொன்னதற்காக காலை நேரத்தில் மீண்டும் வந்து காசு கேட்கும் ராக்கோடங்கி, குரங்காட்டி, சைக்கிளில் துணிகளை ஏற்றி வந்து விற்பவர், பாத்திர வண்டிக்காரர், எண்ணெய் வியாபாரி, முன்னிரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பொருட்கள் விற்பனை செய்யும் ஏலக்காரர் என ஒவ்வொருவரும் எனது ஏக்கப் பயிருக்கு தண்ணீர் விட்டுச் சென்றனர்.

அன்று, இளவேனில் பருவத்தின் காலைப் பொழுது. தெரு முனையில் சிறுவர்களின் ஆரவாரமும் சந்தோஷ கூச்சலும் என்னை வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்தன. கூச்சல் எழுந்த திசையை நோக்கியபோது வியப்பால் எனது விழிகள் விரிந்தன.

ஆம். கரிய நிற குன்று போல ஆடி அசைந்து வந்தது ஒரு யானை. யானைப் பாகனை சுமந்து கொண்டு, தும்பிக்கையை அங்கும் இங்கும் ஆட்டியபடி வந்த அந்த சைவப் புதிரை பார்க்க சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கூடி விட்டனர். யானையின் பின்னாலேயே ஒரு மாட்டு வண்டியில் தென்னை ஓலை, மரக் கிளைகள் என யானைக்கு தேவையான தீவனங்கள் வந்து கொண்டிருந்தன.

கடைகளில் தும்பிக்கையை நீட்டி காசுகளை பெற்றுக் கொண்டிருந்த யானை, தவறாமல் அவற்றை பாகனிடம் தந்தது. அதற்காக மேல் நோக்கி தும்பிக்கையை தூக்கும்போது தந்தமும், யானையின் பெரிய உதடுகளுடன் கூடிய வாயும் என்னை ஆச்சரியப்படுத்தின.

ஒரு சில சிறுவர்களை யானை மீது ஏற்றி சில அடி தூரம் யானைப் பாகன் கூட்டிச் சென்றான். அச்சத்தால் வீறிட்டு அலறிய சிறுவர்களின் முகத்தில் யானையின் தும்பிக்கையில் தண்ணீர் ஊற்றி தெளிக்கச் செய்தான்.

பக்கத்து வீட்டு பொன்னம்மா பாட்டிக்கு பெரிய உருவம். உட்கார்ந்த இடத்தில் இருந்து அவரால் எழுந்திருக்க முடியாது. ஆனால், சிறிய மலைக் குன்று போல இருக்கும் இந்த யானை மட்டும் எப்படி தனது பருத்த உடலை சுமந்து கொண்டு அசைந்தாடி நடக்கிறது. எனக்குள் ஆச்சர்யம். தும்பிக்கை, தந்தம், வால், அதில் இருக்கும் முடி, பரந்த நெற்றி, தூண்களை போன்ற கால்கள் என அனைத்துமே வியப்பை ஆழ்த்தின.

இந்த உலகில் உள்ளவைகளில் எந்த நேரம் பார்த்தாலும் வியப்பை தருபவைகளில் யானையும் ஒன்று அல்லவா?

எங்கள் ஊர் பெரிய கோவிலில் தான் அன்றைய இரவு யானையும் பாகன் உள்ளிட்டோரும் தங்கினார்கள். யானையை பார்த்த வியப்பு விலகாமலேயே இருந்த நானும் வீட்டை மறந்து கோவிலிலேயே தங்கி விட்டேன். என்னைப் போலவே வேறு சில சிறுவர்களும் இருந்தனர். அண்ணன் வந்து அழைத்த பிறகே வீடு திரும்பினேன், ஏக்கத்துடன் யானையை திரும்பி திரும்பி பார்த்தபடி.

அன்றைய தினம் முழுவதும் யானை பற்றிய பேச்சே ஊர் முழுவதும் நிலவியது. ஆனால், எனது எண்ணம் மட்டும் பாகனை சுற்றியே சிறகடித்தது. யானைப் பாகனாகி விட்டால் ஊரை சுற்றி வரலாமே? பெரியவனானதும் யானைப் பாகனாக வேண்டும் என்ற உறுதியுடனேயே தூங்கிப் போனேன்.

நாட்கள் சில கழிந்தன. கருப்பு நிற உருவம் ஒன்றை கையில் பிடித்தபடி ஒருவன் வந்து கொண்டிருந்தான். தட்டையான கால்களில் கூரிய நகங்களுடன் உருட்டி விழித்தபடி காணப்பட்ட அது, ஒரு கரடி. கரடியை அழைத்து வந்து வித்தை காட்டுபவர் யாராவது அவ்வப்போது எங்கள் ஊர் வழியாக செல்வது உண்டு.

கரடிக்கு பின்னாலும் ஒரு சிறிய கும்பல் வந்து கொண்டு இருந்தது. உடல் முழுவதும் நீண்ட முடிகளுடன் காணப்பட்ட கரடியை பார்த்த மிரட்சியா அல்லது பயமா என தெரியவில்லை. ஒரு நாய், தலையை சிலிர்த்தபடி எழுந்தாலும் குரைப்பதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டு இருந்தது.

எங்கள் வீட்டு அருகே வந்த கரடிக்காரன், மலைப் பகுதியில் இருந்து வருவதாகவும் தென்காசி நகருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அம்மாவிடம் கூறினான். சாப்பிட ஏதாவது தருமாறு கேட்டான். காலையில் சூடாக செய்த இட்லிகளில் சிலவற்றை அம்மா கொடுத்தார்.

கரடிக்காரன் கைகளில் ஏராளமான கருப்பு நிற கயிறுகள் இருந்தன. ஒரு சிலர் அந்த கயிறை காசு கொடுத்து வாங்கிச் சென்றார்கள். அவர்களிடம் கொடுக்கும் முன் கரடியிடம் கயிறை நீட்டினான், அந்த கரடிக்காரன். உடனே, முன்னங்கால்களில் வலது காலை உயர்த்தி அந்த கயிறு மீது விசிறுவது போல கரடி ஆட்டியது. இப்படி, கரடியால் ஆசிர்வதிக்கப்பட்ட கயிறை கரடிக்காரன் காசுக்கு விற்றான். அந்த கயிறை கட்டினால் பேய், பிசாசு பயம் இருக்காது என்றார்கள்.

இப்போது கரடிக்காரனும் எனது மனதுக்குள் இடம் பிடித்து விட்டான். அவனைப் போலாகி விட்டால் ஊர் ஊராக சுற்றித் திரியலாமே?

ராக்கோடாங்கி, குரங்காட்டி, பாத்திரக்காரன், துணி விற்பவன், ஏலக்காரன், யானைப் பாகன், கரடிக்காரன் இப்படி ஊர் சுற்றிகள் அனைவருமே எனது மனதை சுற்றி சுற்றி வந்தனர். படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.

ஏதோ தொலைவில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘ஏங்க, இன்னும் என்ன தூக்கம். சீக்கிரம் எழுந்திருங்க’ நேரம் செல்ல செல்ல செவியின் அருகில் அந்த குரல் கேட்கத் தொடங்கியது. அட. என் மனைவி ராதா. அப்போ. இவ்வளவு நேரம் நான் கண்டது எல்லாம் கனவா?

‘ஏங்க, காலையில கோயம்புத்தூர் டிரயின புடிக்கணும்னு சொல்லிட்டு இப்படி தூங்கிக்கிட்டு இருந்தா எப்படி? எந்திரிங்க. வென்னீர், டிபன் எல்லாம் ரெடி. கிளம்புங்க!’ ராதா என்னை விரட்டினாள்.

பிரபலமான பெரிய நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறேன். இன்று மாலை கோவையில் ஒருவரை சந்திக்க வேண்டும். அப்படியே, திருச்சி சென்று அங்கு ஒரு கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்வதற்காக கம்பெனியிலேயே விமான டிக்கெட் எடுத்து வைத்துள்ளனர்.

ச்சே! ஓய்வே இல்லாமல் காலில் சக்கரத்தை கட்டியபடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொழப்பு என்ன பொழப்பு? மனைவி, குழந்தைகளுடன் விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழிக்க முடிகிறதா? அடுத்தகட்ட ஊர் சுற்றும் பயணத் திட்டத்தை மனதுக்குள் சபித்தபடியே குளியறை நோக்கி புறப்பட்டேன்.

Wednesday, 31 August 2011

சந்தைக்கு வந்த சித்தாளு

மாநகரின் மையப்பகுதி
பன்னாட்டு வங்கிகள்
கணிப்பொறி அலுவலகங்கள் & என
கர்ப்பம் தரித்து நிற்கிறது
பிரமாண்ட கட்டிடம்

அதோ தெரியும்
அஞ்சாவது மாடியில் தான்
வேலை பார்த்தேன்
அறிமுகம் செய்தாள் & மகனுக்கு
சித்தாளு, பொன்னாத்தா!

இதோ ஒரு கூண்டு போல
இருக்குதல்லவா-?
இங்கே தான் & கட்டுமானம்
முடியும் வரையிலும்
தங்கியிருந்தோம்

விண்ணை முட்டி
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடத்தை
அங்குலம் அங்குலமாக
அறிமுகம் செய்தாள்,

ஏய், இந்தா, தள்ளிப் போ
காவல்காரரின் அதிகாரக் குரல்
கட்டிடத்தின் வெளி வாயிலில்
இருந்து வீதிக்கு துரத்தியது
சித்தாளு பொன்னாத்தாவை

கணிப்பொறி அலுவலக
பெயர் பலகை மின்னுகிறதே?
அங்கிருந்து தானே
கீழே விழுந்து இறந்தாள்
கல் சுமந்து வந்த கண்ணம்மா

நினைவலைகளின் எச்சம்
கண்களை திரைபோட்டு
மறைக்க
திரும்பி பார்த்தபடியே
சென்றாள், பொன்னாத்தா,

= வை.ரவீந்திரன் 

Saturday, 6 August 2011

நல்லவர்கள் எங்கே?

* முற்பிறவி பாவமே
மறு பிறவிக்கு காரணம்!
மறு ஜென்மம் பற்றிய
ஆன்மிக பெரியோர் வாக்கு இது!!

* மறுபிறவி எடுத்து
துன்பம் அடையாமல் இருக்க
நல்ல செயல்கள் செய்து
புண்ணியவானாக வேண்டும்!!!

* புண்ணியவான்களுக்கு
மறுபிறவி இல்லை என்றால்
புத்தனும் மகாத்மாவும்
மறு பிறவி எடுப்பார்களா?

* நாளுக்கு நாள்
நல்லவர்கள் குறைவதற்கு காரணம்
இப்போது தான்
எனக்கு புரிகிறது

= வை.ரவீந்திரன்

Monday, 25 July 2011

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா

பரந்து விரிந்த இந்த உலகில் பட்டங்களை ஆளவும், சட்டங்களை போடவும் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதை 75 ஆண்டுகளுக்கு முன்பே தேசியக் கவி பாரதி கனவாக பார்த்தார். 21&ம் நூற்றாண்டை கடந்து விட்ட போதிலும் பாரதியின் கனவு, கனவாகவே நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

இந்தியாவின் உயரிய பதவிகளாக ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்வர் என அத்தனை அதிகாரம்மிக்க பதவிகளையும் பெண்கள் அலங்கரித்து விட்டனர். ஆனால், அந்த பதவிகளுக்கு வந்த அனைவருமே தனிப்பட்ட திறமைகளால் உயர்ந்தவர்கள். ஆணாதிக்க சமூகத்தை வென்று வெற்றிக் கனியை பறித்தவர்கள்.
அதே நேரத்தில், உயரிய அதிகார அமைப்புகளான பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு உரிய பங்கை இதுவரை பெற முடியவில்லை. வாக்காளர்களில் 45 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள பெண்கள் சமுதாயத்தில் இருந்து 10 சதவீதம் பேர் கூட பாராளுமன்றத்துக்கோ, சட்டசபைகளுக்கோ தேர்வு செய்யப்படுவதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் கூட, 9 சதவீதத்துக்கு குறைவாகவே பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தொகையில் ஆண்களுக்கு சரி நிகராக உள்ள பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33 சதவீதம்) இடங்களையாவது ஒதுக்கீடு அளிக்குமாறு நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை ஒலிக்கிறது.
இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சியின்போது, 1996&ம் ஆண்டு செப்டம்பர் 12&ந் தேதி அன்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக, அரசியல் சட்டத்தில் 81&வது திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.
ஆனால், அறிமுக நிலையிலேயே பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெண்களுக்கான ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அவர்களில் ஒரு தரப்பினரின் வாதம்.
வெளித் தோற்றத்துக்கு மிகவும் நல்ல வாதம் போல தோன்றினாலும், பெண்கள் இட ஒதுக்கீட்டை தள்ளிப் போட நினைக்கும் சூழ்ச்சியே அதில் மேலோங்கி நிற்கிறது. உண்மையும் அதுதான். அதனால் தான், மசோதா நிறைவேறவே இல்லை.
அதன் பிறகு, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு சார்பில் 1998&ம் ஆண்டு மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, வேறு மூன்று சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டதால், அரசியல் சட்டத்தில் 84&வது திருத்தம் செய்யும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.
இரண்டாவது முறையும் பெண்கள் மசோதா தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு, 1999, 2002, 2003, 2004 என அடுத்தடுத்து பாராளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதே தவிர நிறைவேறவே இல்லை.
ஒவ்வொரு முறை பாராளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தாலும், அந்த ஆட்சி முடிந்ததும் தானாகவே மசோதா காலாவதி ஆகி வந்ததால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய யுக்தியை கையாண்டது.
டெல்லி மேல்&சபைக்கு ஆயுள் காலம் முடிவே கிடையாது. எனவே, மசோதா காலாவதியாகாமல் இருப்பதற்காக டெல்லி மேல்சபையில் 2008&ம் ஆண்டு தாக்கல் செய்தது. பல்வேறு முட்டுக்கட்டைகள், இடையூறுகளை தாண்டி 2010&ம் ஆண்டு மார்ச் 9&ந் தேதி அன்று டெல்லி மேல்சபையில் மசோதா நிறைவேறியது.
அப்போதும் கூட, சாதாரணமாக மசோதா நிறைவேறி விடவில்லை. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8&ந் தேதி அன்று உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் டெல்லி மேல்சபையில் அமளியும், மைக் உடைப்புகளும் அரங்கேறின. அதையும் மீறி, அதற்கு மறுநாள் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையில் இருந்த 245 எம்.பி.க்களில் 186 பேர் ஆதரவு அளித்தனர்.
அதன் பிறகு, பாராளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் பாராளுமன்றத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க முடியவில்லை.
ஒவ்வொரு முறை பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போதும், 'இந்த கூட்டத் தொடரில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்வோம்' என்பது மத்திய ஆட்சியாளர்களின் வழக்கமான பல்லவியாகவே அமைந்து விட்டது.
இப்போது நடைபெறுகிற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் வழக்கம்போல(!) மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக, கடந்த ஜூலை மாதம் மட்டும் இரண்டு முறை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கூட்டி விட்டார். ஆனாலும், பலனில்லை.
அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு தான் இந்த சட்டத்தை அமல் படுத்துவோம் என மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்த உறுதிக்கு என்ன காரணம் என யாருக்குமே தெரியவில்லை. ஏனெனில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் போதும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் என பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. இந்த கட்சிகளின் ஆதரவு இருந்தாலே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்.
முதன் முதலில் 1996&ம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகமாகும் போது, அரசியல் சட்டத்தின் 81&வது திருத்தமாக கொண்டு வரப்பட்டது. ஆனால், 2008&ம் ஆண்டு டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்தபோது அரசியல் சட்டத்தின் 108&வது திருத்தமாக மசோதா தாக்கலானது. அதாவது, இந்த காலகட்டத்துக்குள் 27 திருத்தங்களை அரசியல் சட்டத்தில் செய்துள்ளனர். ஆனால், மகளிர் மசோதாவுக்கு மட்டும் தான் இன்னமும் விடிவு காலம் பிறக்கவில்லை.
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக, காங்கிரஸ், பா.ஜனதா, கம்யூனிஸ்டு என அனைத்து அரசியல் கட்சிகளின் பெண் தலைவர்களும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், 'அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு மட்டுமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என வறட்டு பிடிவாதம் காட்டுவது அரசியல் நாடகம்' என பெண்கள் அமைப்பினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
அனைத்து நிலைமைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களுடைய கூற்று முற்றிலும் நிதர்சனமாக உண்மை. இந்த அரசியல் நாடகம் முடிந்து, 'கிளைமாக்ஸ்' மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது வரும் என்பதே இந்திய பெண்களின் எதிர்பார்ப்பு.
‘மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்’ என்பார்கள். ஆனால், இந்திய பெண்கள் என்ன பாவம் செய்தனரோ-? ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய உரிமைப் போராட்டம் முடிவின்றி நீடிக்கிறது.
ஒரு ஆண் கல்வி கற்றால் ஒருவர் மட்டுமே பயனடைவார். ஆனால், ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒட்டு மொத்த குடும்பம் அல்லது 100 பேர் வரை கல்வியறிவு பெறுவார்கள். கல்விக்கு மட்டுமல்ல அதிகாரத்துக்கும் இது பொருந்தும். இதை அனைவரும் உணர்ந்தால் சமூகத்துக்கு நல்லது.
''''''''''''''''

பாக்ஸ் 1
=====
பெண்களுக்கு எத்தனை தொகுதிகள்?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வந்தால் பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதுபோல, இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளில் மொத்தம் இருக்கும் 4109 எம்.எல்.ஏ. பதவிகளில் 1370 எம்.எல்.ஏ. பதவிகள் பெண்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகள் அனைத்தும் மூன்று தேர்தல்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2009&ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 59 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர். அதில், காங்கிரஸ் சார்பாக 23 பேரும், பா.ஜனதா சார்பாக 13 பேரும் வெற்றி பெற்றனர். இது, 11 சதவீதம். அதுபோல, தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். இது, வெறும் 6 சதவீதம். நியமன எம்.எல்.ஏ.வாக நான்சி அனன் என்ற பெண் டாக்டர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
''''''''''''

பாக்ஸ் 2
=======
எதிர்ப்பாளர்களின் குரல்


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி என அனைவருமே கூறும் ஒரே காரணம், மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.
இதில் முலாயம் சிங் மட்டும் சற்று வித்தியாசமான விளக்கத்தை கூறுகிறார். ஏற்கனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக 22 சதவீத பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இனி பெண்களுக்கும் 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கினால் பாராளுமன்றத்தில் 55 சதவீத இடங்கள் இட ஒதுக்கீட்டிலேயே போய் விடும். இது தான் முலாயம் எடுத்து வைக்கும் வாதம்.
அதற்கு பதிலாக 10 சதவீத இடங்களை பாராளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கலாம். அரசியல் கட்சிகளே 10 சதவீத இடங்களை கண்டிப்பாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். என்பது போன்ற யோசனைகளையும் அவர் தெரிவிக்கிறார். இது தவிர, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு அரசியல் கட்சியும் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கலாம் என்ற யோசனையையும் எதிர்ப்பாளர்களில் சிலர் முன் வைக்கின்றனர்.