Thursday 25 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 1

= வை.ரவீந்திரன்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய அரசு சட்டம்'1935-ன் படி, 1937ம் ஆண்டு சென்னை மாகாணம் உட்பட இந்தியா முழுவதும் 11 மாகாணங்களுக்கு சட்டப்பேரவை, மேலவை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்துக்கு நடந்த இந்த தேர்தலில் 215 இடங்களில் 159 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பொப்பிலி ராஜா தலைமையிலான நீதிக்கட்சி 21 இடங்களை பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் பொப்பிலி ராஜா தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அநேக இடங்களில் பலரும் போட்டியின்றி (அன் ஆப்போஸ்டு) தேர்வாகி இருந்தனர். சாத்தூரில் இருந்து தேர்வான காமராஜரும் அவர்களில் ஒருவர்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும் மாகாண ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க மறுத்தது. அதனால், 2வது பெரிய கட்சியான நீதிக்கட்சி தலைமையில் 1937 ஏப்ரல் 1ம் தேதி இடைக்கால அரசு அமைந்தது. சுமார் 4 மாதங்கள் நீடித்த அந்த அரசின் முதல்வர் கர்மா வெங்கட ரெட்டி நாயுடு. நீதிக் கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், எம்.ஏ. முத்தையா செட்டியார் உட்பட 5 பேர் அமைச்சர்களாகினர்.
அதன்பிறகு, ஆங்கிலேயருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்ற மாகாணங்களில் ஆட்சி பொறுப்பை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி முன் வந்தது. அதனால், சென்னை மாகாண முதல்வராக 1937 ஜூலையில் ராஜாஜி பொறுப்பேற்க அவர் தலைமையில் 9 பேர் சென்னை மாகாண அமைச்சர்களாக பதவியேற்றனர். 


ஆனால், இரண்டாம் உலகப்போரில் இந்தியாவையும் பங்கெடுக்கச் செய்வதை கண்டித்து 1939ம் ஆண்டில் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனால், சென்னை மாகாணத்தில் ஆளுநர் ஆட்சியை பிரிட்டிஷ் அரசு அமல்படுத்தியது.

(நினைவுகள் சுழலும்...)

No comments: