= வை.ரவீந்திரன்.
ஒரு சின்னதாக ‘கோட்டை’யை பற்றிய ரீவைண்ட் பிளஸ் அலசல்.
தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ‘கோட்டை’யை பிடிப்பது
தான் கனவாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழக ஆட்சி நிர்வாகத்துடன் இரண்டற கலந்துள்ள
புனித ஜார்ஜ் கோட்டைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அது தனிக்கதை. ஆனால், ஆரம்ப
காலங்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக சட்டப்பேரவை (சென்னை மாகாணம்) கூட்டம்
நடைபெற்றது இல்லை.
1935ம் ஆண்டில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டப்பேரவையாக
சென்னை மாகாணத்தில் அமைவதற்கு முன்பு, 1920ல் மேலவை மட்டும் கொண்ட சென்னை மாகாண
சட்டப்பேரவையை ஆங்கிலேயர்கள் அமைத்திருந்தனர். அதன் முதல் கூட்டம் 1921ம் ஆண்டு
ஜனவரி 9ம் தேதி அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சிலர் அறைகளில்
நடைபெற்றது. 1937 வரை இங்கு தான் கூட்டங்கள் நடைபெற்றன.
1935ம் ஆண்டில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டப்பேரவை
உருவாக்கப்பட்டது.
இதனால், 1937 முதல் 1938 வரை சென்னை சேப்பாக்கத்தில்
சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள செனட் இல்லம், 1938 முதல் 1939 வரை அரசினர்
தோட்டத்தில் (கலைஞர் ஆட்சியில் கட்டிய புதிய சட்டசபை வளாகம் என்னும் பல்நோக்கு மருத்துவமனை)
உள்ள ராஜாஜி மண்டபம் ஆகியவற்றில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன்பிறகு, 1946ல் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை திரும்பியது.
ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டப்பேரவையில் 375
பேர் தேர்வு செய்யப்பட்டதால் இடப்பற்றாக்குறை காரணமாக, 1952ம் ஆண்டு முதல் அரசினர்
தோட்டத்தினுள் உள்ள கலைவாணர் அரங்கத்தில் (வாலாஜா சாலையில் சமீபத்தில்
புதுப்பிக்கப்பட்ட கட்டிடம்) சட்டப்பேரவை கூடியது. 1956ம் ஆண்டு வரை சென்னை
மாகாணத்தின் முதலாவது சட்டப்பேரவை கூட்டம் அனைத்தும் கலைவாணர் அரங்கில் தான்
நடைபெற்றது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, கேரளா,
ஆந்திரா, கர்நாகடக மாநிலங்கள் பிரிந்து சென்னை மாகாண உறுப்பினர்கள் எண்ணிக்கை
குறைந்தது. இதனால், 1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, மீண்டும் புனித
ஜார்ஜ் கோட்டைக்கு சென்னை மாகாண (தமிழக) சட்டப்பேரவை திரும்பியது. மேலும், கூட்டம்
நடத்துவதற்காக சட்டமன்ற கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, கூட்டம் நடைபெறும் இடம்
தான் அது. இந்த அரங்கில் தான், 1957ம் ஆண்டு இரண்டாவது சட்டப்பேரவை முதல்
தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
இந்த கால இடைவெளிக்குள், 1959ம் ஆண்டில் ஒரு மாதம் ஊட்டி
அரண்மனையில் சட்டப்பேரவை கூடியது. அதுபோல, 2006ம் ஆண்டு பொறுப்புக்கு வந்த திமுக
ஆட்சியின்போது அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டிய சட்டப்பேரவை கட்டிடத்தில்
(இப்போது பல்நோக்கு பொது மருத்துவமனை) 2010 மார்ச் முதல் 2011 மே வரை தமிழக
சட்டப்பேரவை நடைபெற்றது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்.
(நினைவுகள் சுழலும்...)
No comments:
Post a Comment