Monday 29 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 9

= வை.ரவீந்திரன்.

தமிழகத்தில் 1962ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட தொடங்கியது. இதை அறிந்த காமராஜர், கட்சியை வளர்ப்பது அவசியம் என அறிந்தார். அதனால், உதயமானது ‘கே பிளான்’. அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும். 

அந்த திட்டத்தை அறிவித்ததோடு நிற்காமல், முதல் ஆளாக தனது முதல்வர் பதவியை 1963 காந்தி ஜெயந்தி அன்று ராஜினாமா செய்தார். காமராஜரை பின்பற்றி 6 மத்திய அமைச்சர்களும், 6 மாநில முதல் அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னாளில் பிரதமர் பதவிக்கு வந்த லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

தமிழகத்தில் முதல்வர் பதவிக்காக 10 ஆண்டுக்கு முன் தன்னை தீவிரமாக எதிர்த்த பக்தவத்சலத்தையே முதல்வர் பதவியில் அமர்த்தினார் காமராஜர். 1963ம் ஆண்டு அக்.2ம் தேதி அன்று காந்தி பிறந்த தினத்தில் முதல்வர் பதவியேற்றார் பக்தவத்சலம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி முதல்வர் என்ற பெயர் தனக்கு கிடைக்கும் என்று பக்தவத்சலம் அப்போது அறிந்திருக்கவில்லை.  


அவர் பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசியல் வரலாறு மெதுவாக மாறத் தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் மனம் நோகாமல் கருத்து சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர். ராஜாஜி கூட, அவரை பதிலளிக்குமாறு கூறுவது உண்டு. ஆனால், அவரது அரசின் நிர்வாக குறைபாடு, விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு என காங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் ஆரம்பமானது.

போராட்ட களங்களில் முன்னிலை, இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்துவமான தமிழ் நடை, மேடைச் சொற்பொழிவு என மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மனதிலும் திமுக விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

No comments: