= வை.ரவீந்திரன்.
இந்தியாவில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்குரிமை
பெற்ற முதலாவது தேர்தல் 1952ம் ஆண்டு தேர்தல் தான். அந்த தேர்தல் முடிவில், சென்னை
மாகாணத்தில் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் உரிமை கோரினர். உடனே, ராஜாஜியை
அனுப்பி காங்கிரஸ் ஆட்சிக்கு வழி ஏற்படுத்த காங்கிரஸ் தலைமை தீர்மானித்தது. அந்த
திட்டத்தை எதிர்த்த காமராஜர், ‘கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஐக்கிய
ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க விடுவோம். அதுதான் ஜனநாயகம். பல கட்சிகள் அடங்கிய
அந்த கூட்டணி அரசு விரைவிலேயே கவிழ்ந்து விடும்’ என்று அறிவுறுத்தினார்.
அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. காங்கிரஸ்காரரான
ஆளுநர் பிரகாசாவும் அதை விரும்பவில்லை. ராஜாஜியை மேலவை நியமன எம்எல்ஏவாக நியமித்து,,
அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பிரகாசா அழைத்தார். அமைச்சரவை சிபாரிசின் படியே
நியமன எம்எல்ஏ நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த விதிகளை மீறி தன்னிச்சையாக
செயல்பட்டார் ஆளுநர் பிரகாசா.
இதற்கிடையே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சைகள்
பேரம் பேசப்பட்டனர். பேரம் கூடி வந்தது. 1939ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது
ஆளுநரிடம் அதிகாரம் குவிந்திருப்பதாக கூறி ஆட்சியில் இருந்து வெளியேறிய அதே
காங்கிரஸ், 1952ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் அபரிமிதமான அதிகாரத்தின்
ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது.
இதையடுத்து, நடந்த சபாநாயகர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த
சிவசண்முகம் பிள்ளை, 206 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பின்னர், ராஜாஜி
தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அந்த வகையில், சுதந்திர
இந்தியாவில் முதன் முதலாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய பெருமையை சென்னை மாகாண
சட்டப்பேரவை பெற்றது. 1952 ஜூலை 3ம் தேதி நடந்த அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200
எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ராஜாஜி அமைச்சரவை வெற்றி பெற்றது. ஆட்சியை எதிர்த்து 150
எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
ஒரு வழியாக பல்வேறு சதுரங்க வேட்டைகளுக்கு பிறகு, சென்னை
மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. காமன்வீல் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய
கட்சிகளின் ஆதரவு, 15 சுயேச்சைகள் காங்கிரசில் சேர்ந்தது, கிரிசிகார் கட்சியை
உடைத்தது என பல்வேறு கோல்மால்களுடன் காங்கிரஸ் ஆட்சி சாத்தியமானது. அப்போது,
கட்சித் தாவல் தடைச்சட்டம் இல்லாதது வசதியாக இருந்தது.
இப்படியாக, முதல்வர் பொறுப்புக்கு வந்த ராஜாஜி
அமைச்சரவையில் 14 பேர் அமைச்சர்களாகினர். ஆனால், இவ்வளவு களேபரங்களுக்கு இடையே
அமைந்த ராஜாஜி ஆட்சி, ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. பாராளுமன்ற தேர்தலில்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றி பெற்றிருந்த காமராஜர்,
சென்னை மாகாண முதல்வரானார். அது எப்படி சாத்தியமானது ...?
(நினைவுகள் சுழலும் ...)
No comments:
Post a Comment