Friday 1 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 25



= வை.ரவீந்திரன். 

தமிழகத்தில் 1984ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமானது. ஆளும் அதிமுக கூட்டணியில் அதிமுக தலைவர் எம்ஜிஆர், தமிழகத்தில் இல்லை. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மற்றொரு கட்சியான காங்கிரசில் பிரபலமான தலைவரான இந்திரா மறைந்ததோடு, மக்களுக்கு பரிச்சயமே இல்லாத அவரது மகன் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார். எதிர்க்கட்சியான திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலில் போட்டியிடவே இல்லை.  



இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் உடல்நிலை குறித்து பலவாறாக பேசப்பட்டது. தேர்தல் களத்திலும் அதுவே எதிர்க்கட்சிகளின் பிரதான பிரச்சாரமாக அமைந்தது. அதையும் தாண்டி, அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் எம்ஜிஆர். அப்படியே, அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெறுவதை வீடியோ படமாக்கி, கிராமங்கள்தோறும் அதிமுகவினர் திரையிட்டனர். 



அதிமுக மூத்த தலைவர்களின் இடையூறுகளை கடந்து, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. அதிமுக பார்டருடன் கூடிய வெள்ளை புடவையை தனக்கான அடையாளமாக்கிக் கொண்டார். இந்திரா மறைவு, எம்ஜிஆரின் உடல்நலக் குறைவு என 1984 தேர்தலில் அனுதாப அலை மிகப்பெரியதாகவே வீசியது. முடிவில், 234 தொகுதிகளில் 195 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.



அதிமுக மட்டும் தனியாக 132 இடங்களை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் கிடைத்தன. அதில், 24 இடங்களை திமுக பெற்றது. ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் 2300 வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் 61 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு 1967க்கு பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. 



1967 தேர்தலின்போது குண்டடிபட்டு படுத்துக்கொண்டே எம்எல்ஏவாக ஜெயித்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். ஆண்டிபட்டி தொகுதியில் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அமெரிக்க சிகிச்சை முடிந்து 1985ம் ஆண்டு பிப்.4ம் தேதி சென்னை திரும்பிய எம்ஜிஆர், பிப்.10ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் தொடர்ந்து மூன்று தேர்தல்களை சந்தித்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல்வர் எம்ஜிஆர் ஒருவரே.



தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. வடசென்னை, மத்திய சென்னை இரண்டு தொகுதிகளில் மட்டும் திமுக வென்றது.

(நினைவுகள் சுழலும்)

No comments: