= வை.ரவீந்திரன்
1991 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமைந்த ஜெயலலிதா
ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. வளர்ப்பு மகன் திருமணம்,
கும்பகோணம் மகாமகம் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலி என சர்ச்சைகள் வரிசை கட்டி
நின்றன. மத்தியிலும் நரசிம்ம ராவ் ஆட்சியின் மீது ஊழல் புகார்கள் எழுந்தன.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என தொடர்ந்தது.
1991 தேர்தலுக்கு பிறகு தான், தமிழகத்தில் ஐந்து
ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் வழக்கம் இடைவிடாமல் தொடருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், 1996ம் ஆண்டு சட்டப்பேரவைக்கும்,
பாராளுமன்றத்துக்கும் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணி
தொடரும் என காங்கிரஸ் மேலிடம் சார்பாக பிரதமர் நரசிம்ம ராவ் அறிவித்தார்.
உடனே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுகவுடன் கூட்டணி
வைக்கக் கூடாது என்று கூறி மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்க,
சத்தியமூர்த்தி பவனில் கலவரம் ஏற்பட்டது. பெரும்பான்மையானோர் மூப்பனார் வசம்
இருந்ததால் தமிழ் மாநில கட்சி தோன்றி, திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த
கூட்டணிக்கு ரஜினி காந்த் கொடுத்த ‘வாய்ஸ்’, தானாக முன் வந்து நடிகர் சரத்குமார்
மேற்கொண்ட பிரச்சாரம் என டாப் கியரில் ஓடியது.
மறுபுறம், ஊழல் கூட்டணி என்று முத்திரை குத்தப்பட்ட
அதிமுக, காங்கிரஸ் கூட்டணி பரிதாபமாக இருந்தது. இந்த தேர்தலில் தான் முதன்
முறையாக, திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வைகோ தலைமையிலான மதிமுக போட்டியிட்டது.
திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதிமுக அணியில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருந்தன.
1996ம் ஆண்டு மே 2ம் தேதி நடந்த தேர்தலில் திமுக / தமாகா
கூட்டணி 221 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 4வது முறையாக தமிழக
முதல்வரானார் கருணாநிதி. தமாகாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. பர்கூர்
தொகுதியில் திமுகவின் அறிமுக வேட்பாளர் சுகவனத்திடம் முதல்வர் ஜெயலலிதா தோல்வி
அடைந்தார். அதுபோல, விளாத்திகுளம், சிவகாசி என இரண்டு இடங்களில் போட்டியிட்ட
வைகோவும் தோல்வி அடைந்தார்.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment