Tuesday 8 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 9

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி என பார்த்தால் எதுவும் கிடையாது என்றே சொல்ல முடிகிறது. மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை பகுதியில் இருந்த சில தொழிற்சாலைகளும் அரசின் செயல்பாடு மாமூல் தொல்லை போன்றவற்றால் மூடப்பட்டன. ஏடிஎம் இயந்திரம் தயாரிப்பு தொழிற்சாலைகள் இரண்டு இருந்தன. ஏ.எடி.எம்மில் ஆயிரம் ரூபாய் திருடு போனால் கூட அங்கு சென்று போலீசார் விசாரிப்பது, உள்ளூர் ரவுடிகளின் மாமூல் தொல்லையால் அந்த நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் சென்று விட்டன. இது சிறிய உதாரணம்.

உயர் கல்வியை பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் டெல்லி சென்று அனுமதி வாங்கி வருவது வழக்கம். தனியார் மருத்துவ கல்லூரிகளும் (ஏழு இருக்கின்றன) பொறியியல் கல்லூரிகளும் அரசு ஒதுக்கீடு இடங்களை அளிப்பதே கிடையாது. தமிழகம் போல இல்லை. அரசு ஒதுக்கீடு இடங்களை பெற ஆண்டுதோறும் அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்படியும் கூட போதுமான இடங்களை தனியார் கல்வி தந்தைகள் வழங்குவதில்லை.

சென்டாக் (உயர்கல்வி சேர்க்கை மையம்) முன்பு ஆண்டுதோறும் மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்துவதும் ஈசிஆரில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வு. பொறியியல் கல்லூரிகளில் பாண்டிச்சேரி என்ஜினியரிங் கல்லூரி மட்டுமே அரசு கல்லூரி. மற்றவை தனியார் கல்லூரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிப்மரில் அகில இந்திய நுழைவு தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறும். அதில், புதுச்சேரிக்காக 25 இடங்கள் வரை உண்டு.

புதுச்சேரியில் பேருந்து மற்றும் மதுபானம் அனைத்தும் தனியார் வசம் இருப்பதால் அரசுக்கு வருவாய் கிடையாது. மதுபானம், கள், சாராயக்கடை ஏலம் மூலம் 100 முதல் 200 கோடி வரை மட்டுமே கலால் துறைக்கு கிடைக்கும். இதுபோக, சுற்றுலா வருவாய். அதுவும் தனியார் விடுதிகள் மற்றும் 5 கி,மீ தொலைவுக்கு 200 ரூபாய் வரை கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கே அது போய் சேரும்.

இப்படியாக தொழில், கல்வி, நிர்வாகம் என அனைத்திலும் ஆட்சியாளர்களிடம் திட்டமிடல் எதுவும் இல்லை. பேருந்துகள், மதுபானக் கடைகள் அனைத்தும் கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைகளிடம் தான் இருக்கின்றன. இப்படி ஒரு சூழ்நிலையில், மாநில அந்தஸ்து பெற்றால் வளம் கொழிக்கும் என்ற கோஷத்தையும்…. வெளி மாநிலத்தவர் வருகையால் தான் மாநில வளர்ச்சி முடங்கியது என்ற வாதத்தையும் புதுச்சேரி மக்களிடம் அரசியல் தலைவர்கள் பரப்புகின்றனரோ என்ற சந்தேகம் எனக்குள் உண்டு.

எல்லா மாநிலங்களையும் போலவே ஆளுங்கட்சிக்கு அணுக்கமாக சில லட்டர் பேடு கட்சிகளும், எதிர்க்கட்சிக்கு அணுக்கமாக சில லட்டர் பேடு கட்சிகளும் புதுச்சேரியில் உண்டு. அவற்றின் அணுகுமுறைகள் மற்றும் போராட்ட அறிவிப்புகளும் கூட இதையே பெரும்பாலும் பிரதிபலிக்கும்.
(அனுபவங்கள் இனிக்கும்…)

No comments: