தலைகோதி அன்பை
சொரியும் அன்னையாய்
அலைக்கரங்களால்
படகை தழுவும் கடல் அன்னையே!
பசியை தானே உண்டு
அந்த ஒற்றை சொல் மகனாய்
வளர்க்கும் தெய்வமாய்
மடி சுரக்கும் மீன்வளம் தந்தாய்!
கரையில் காத்திருக்கும்
தாயையும் பிரிந்து
உன் மடியில் தஞ்சமடைந்தோம்
உன் மீதான எங்கள்
நம்பிக்கையை பொய்ப்பித்தது ஏன்?
அதிகாலையில் ஆவேசம் கொண்டு
கடலோர குழந்தைகளை
உதைத்து எழுப்பியது ஏன்?
தாயாய் காப்பாய் என
நம்பி இருந்த எங்களை
கபளீகரம் செய்தது ஏன்?
குஞ்சுகளை இரையாக்கும்
பகாசுர மீனாகியது ஏன்?
உன் சதிராட்டத்தில்
உறவுகளை தொலைத்தோர் எத்தனை?
உயிர் பிரியும் தருணத்தில்
தனுஷ்கோடி லெமூரியா
கண்டோர் எத்தனை?
கண்டிக்கும் அன்னையிடம்
காணும் கனிவு உன்னிடம்
காணாமல் போனதெங்கே?
இனியாவது அன்பு காட்டும்
அன்னையாய் இரு
உன் கோபத்தை தாங்கும்
சக்தி இல்லை எங்களுக்கு....
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment