Tuesday 8 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 14

புதுச்சேரி குட்டி மாநிலம் என்பதாலும், அதிலும் புதுச்சேரி என்பது அந்த யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியம் என்பதாலும் அரசு சார்பிலான அனைத்து பரீட்சார்த்த முயற்சிகளும் அங்குதான் முதலில் அரங்கேறும். மத்திய அரசை எதிர்பார்த்து இருக்கும் மாநிலம் என்பதால், நல்லதோ, கெட்டதோ அங்கு சோதனை நடத்தி பார்ப்பது எளிது. அதனால், சில வசதிகளும் முதலில் கிடைத்தன.

சமையல் காஸ் மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை, முதன் முதலில் புதுச்சேரியில் தான் அறிமுகமானது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்த 45 மாவட்டங்களில் புதுச்சேரியும் ஒன்று. அங்கு 2013ம் ஆண்டிலேயே வங்கிக் கணக்கில் காஸ் மானிய தொகை செலுத்தப்பட்டது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதாலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதாலும் ஒன்றிரண்டு மாதங்களிலேயே அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது, நாடு முழுவதும் அமலில் இருக்கும் அந்த திட்டத்தின் முதல் விதை அங்குதான் ஊன்றப்பட்டது.

தற்போது, ரேஷன் பொருட்களுக்கு பதிலாக மானிய தொகையை வங்கியில் நேரடியாக செலுத்துவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. அந்த முயற்சியும் புதுச்சேரியில் ஆரம்பமாகி விட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு பதிலாக மாதந்தோறும் 300 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னமும் அறிமுக நிலையிலேயே இருக்கிறது.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் முக்கிய தேவை, ஆதார். அதிலும் புதுச்சேரி முதன்மை மாநிலம். கிட்டத்தட்ட 100 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டு விட்டது. ரேஷன் கார்டு, ஆதார், வங்கிக் கணக்கு எண், சமையல் காஸ் இணைப்பு இவை எல்லாம் இணைந்த சிஸ்டம் அங்கு வெற்றிகரமாக ஓடுகிறது. 2 ஆண்டுக்கு முன்பே 25 ரூபாய்க்கு வண்ண பிளாஸ்டிக் வாக்காளர் அட்டை, அங்கு அறிமுகமாகி விட்டது.

வங்கி பற்றி கூறும்போது, இன்னொன்றையும் சொல்வது அவசியம். சில தனியார் ஏடிஎம் மையத்தில் செக் டெபாசிட் செய்யும் பாக்ஸ் இருப்பதை பார்த்திருப்போம். வங்கியில் காத்திருக்காமல் ஏ.டி.எம் இயந்திரத்திலேயே பணத்தை டெபாசிட் செய்யும் வசதி அங்கு உண்டு. பாஸ்புக்கில் கணக்கு வரவு, செலவை பதிவு செய்வதற்காக தனியாக ஒரு இயந்திரம் உண்டு. அதற்காக, பாஸ்புக்கின் பின்புறத்தில் அதற்கான ‘பார் கோடு’ பிரிண்ட் செய்து தந்து விடுவார்கள். நெட் பேங்கிங் வசதிகள் இருந்தாலும், வங்கிகளில் குவியும் சாதாரண வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க அது சிறப்பானது.

(அனுபவம் இனிக்கும்)

No comments: