Wednesday 16 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 15

அரசு அலுவலகங்கள் என்றதும் ஒருவித பிம்பம் மனதுக்குள் எழும். புதுச்சேரியில் அதுபோன்ற நிகழ்வை எங்குமே நான் பார்த்ததில்லை. மின்வாரிய அலுவலகம், கல்வி அலுவலகம், வழங்கல் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு அலுவலகங்கள் என நான் பார்த்த ஒவ்வொரு அலுவலகத்திலுமே அரசு ஊழியர்கள் என்னை வியக்க வைத்தனர். தமிழகத்தில் ஏதோ ஒரு வேலைக்காக சென்று ஒரு கேள்விக்கு அடுத்து இரண்டாவது கேள்வியை கேட்டாலே எரிந்து விழுவதை பார்த்தே அனுபவப்பட்ட எனக்கு வித்தியாசமாக இருந்தது.

ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு நாளாகும்? என்பதில் தொடங்கி பொறுமையாக பதில் சொல்வதில் வித்தியாசமானவர்கள். நமக்கு பின்னால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சந்தேகங்களுக்கு எரிச்சல் படாமல் விளக்குவார்கள். அரசு அலுவலகங்களில் வேலை துரிதமாக முடிகிறதோ இல்லையோ? அது வேறு விஷயம். வந்தவர்களுக்கு பொறுமையாக பதில் கூறுவதிலேயே பாதி வேலை முடிந்த திருப்தி, பொது மக்களுக்கு ஏற்படும். இது, அரசு கொண்டு வந்த நடைமுறையாக தெரியவில்லை. அரசு ஊழியர்களின் சுபாவமே, அதுதான்,

1964 வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததாலும், இன்னமும் பிரான்சுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் பிரெஞ்சு மொழி நெருக்கமாக இருக்கிறது. அங்குள்ள மக்களின் பேச்சு வழக்கில் பிரெஞ்சு வார்த்தைகளின் கலவையை பார்க்கலாம். பள்ளியிலும் விருப்பப் பாடமாக பலர், பிரெஞ்சு மொழியை தேர்வு செய்கின்றனர். குளூனி பெண்கள் பள்ளி, பெத்தி செமினார் ஆண்கள் பள்ளி போன்றவை பிரெஞ்சியர் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளிகள். பிரெஞ்சு பள்ளிகள் இன்னமும் புல்வார் பகுதியில் இருக்கின்றன.

பிரெஞ்சு பற்றி பேசும்போது, பிரெஞ்சு இன்ஸ்டிடியுட் பற்றிய சில தகவல்களும் நினைவுக்கு வருகிறது. கடற்கரையோரத்தில் அரவிந்தர் ஆசிரம கண் மருத்துவமனை அருகில் உள்ள அந்த நிறுவனத்தில் ஓலைச் சுவடி ஆராய்ச்சி, பழங்கால சிற்ப ஆராய்ச்சி போன்றவை பிரசித்தம். பல அரிய ஓலைச் சுவடிகளை சேகரித்து வைத்து, அவற்றை ஆய்வு செய்து வரும் பெரியவர் ஒருவருக்கு இரு ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சாமி சிலைகளை அடையாளம் காண்பதில், இந்த நிறுவனம் உதவுகிறது. அங்குள்ள சிற்ப ஆராய்ச்சி பிரிவில் இந்தியா முழுவதும் உள்ள பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் மிக்க சிலைகளின் புகைப்படங்கள், அவற்றின் முழுமையான பயோ விபரங்களுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் இந்திய சிலைகளை அடையாளம் கண்டறிவதற்கு இந்த தகவல்கள் உதவுகின்றன. நான், அங்கிருந்த சமயத்தில், இந்த தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் சில சிலைகள் கண்டறியப்பட்டிருந்தது. அவற்றை, பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது அவரிடம் ஆஸ்திரேலிய அரசு வழங்கியது. இதுபோன்ற தகவல்களை பெறுவதற்காக, பல்வேறு நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் வருவது, அடிக்கடி நடைபெறும் நிகழ்வு…

(அனுபவம் இனிக்கும்)

No comments: