Friday 27 January 2017

வெற்றியை நோக்கி … 10

காலம் பொன் போன்றது

காலம், நேரம், தருணம் இப்படி பல்வேறு பெயர்களில் அழைத்தாலும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம் அது. ஓலைக் குடிசையின் வழியே வானை நோக்கிக் கொண்டிருக்கும் சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி. ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி. உலகிலேயே மிக அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி. உலகின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும் சரி. அனைவருக்குமே இறைவன் அளித்திருப்பது ஒரே மாதிரியான கால அளவு தான். ஒரு நாளுக்கு 24 மணி என்பது அனைவருக்குமே சமமானது.
 
அனைவரிடமும் மணிக்கு தலா 60 நிமிடங்கள் வீதம் வாரியாக முழுதாக 24 மணி நேரம் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த காலத்தை பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, வாழ்க்கைத் தரம், வேலை, புகழ், பணம், பதவி, சொகுசான வாழ்க்கை, அடுத்தவரை அண்டி நிற்கும் நிலைமை என பலதரப்பட்ட நிலைமைகளும் ஏற்படுகின்றன. நேரம் போதவில்லை. பொழுது போகவில்லை என்பதெல்லாம் சோம்பேறிகளின் கூற்று. ஏனெனில், தினமும் 3 கோடியே 15 லட்சத்து 36 ஆயிரம் விநாடிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன.

இந்த பூவுலகில் மனிதனின் சராசரியான வாழ்நாள் 65 ஆண்டுகள் என வைத்துக் கொண்டால் தோராயமாக ஒவ்வொருவருக்கும் சுமார் 25 ஆயிரம் நாட்கள் மட்டுமே கடவுளால் எண்ணி வழங்கப்பட்டு இருக்கின்றன. முன்பின் அறியாத ஊருக்குச் சென்றால் கையில் சிறிதளவே இருக்கும் பணத்தை எந்த அளவுக்கு மிகச் சிக்கனமாக செலவு செய்கிறோமோ? அதுபோலவே, இந்த நாட்களையும் மிக மிக கவனமாக செலவு செய்ய வேண்டும்.

அப்படி நாம் செய்திருக்கிறோமா? இந்த கேள்வியுடன் கடந்த காலத்தை நாம் சிறிது திரும்பிப் பார்த்தால் திருப்தியான பதில் கிடைக்காது என்பதே கசப்பான உண்மை. காலாவதியான செக் போல கடந்து விட்ட கடந்த காலம் குறித்து யோசிப்பதில் அர்த்தம் கிடையாது. செலவழிக்காமல் கையில் குவிந்து கிடக்கும் ரொக்கப் பணம் போல இருக்கும் நிகழ்காலம் குறித்து யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறவும் வேலையில் முன்னேறவும் நிகழ்கால முடிவுகள் அர்த்தம் நிறைந்தவை. அவசியமானவை.

அந்த முடிவுகளை எடுப்பதற்கு முன், திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. நேரத்தை மிகச் சரியாக நிர்வகிப்பதில் தான் ஒவ்வொருவருடைய வெற்றியின் சூட்சுமமும் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் பட்டியலிட்டு கொள்ள வேண்டும். முதலில் எந்த வேலை என்பதை அறிந்து அந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பெரியவர்களும் இதையே, ‘பருவத்தே பயிர் செய்’ என்றனர். அதாவது, மிகச் சிறந்த விளைச்சலை பெற வேண்டுமானால் மிகச் சரியான மழைப் பருவத்தை அறிந்து அதற்கு ஏற்ற சரியான விதையை நிலத்தில் விதைக்க வேண்டும். 

இது, வாழ்க்கைக்கும் 100 சதவீதம் பொருந்தும். இளமை பருவத்தில் வேலையை தேடிக் கொள்ள வேண்டும். காலம் கடந்து விட்டால் எக்ஸ்பயரி ஆன உணவு பொருட்கள் எப்படி உதவாதோ? அதுபோலவே எக்ஸ்பயரி ஆகி விடுவோம். ‘பர்ஸ்ட் இம்ப்ரஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஸன்’ என ஆங்கிலத்தில் கூறுவார்கள். முதலில் தோன்றும் அபிப்பிராயமே நல்ல அபிப்பிராயமாக இருக்கும். இதையே, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்ற வார்த்தைகளில் கூறி வைத்தனர். உங்களுடைய கால நிர்ணய பட்டியலை எப்படி முதலில் வகுத்துக் கொள்கிறீர்களோ? அதற்கு ஏற்பவே பலன் கிடைக்கும். அதிகாலையிலேயே பணிகளை சுறுசுறுப்பாக துவங்க வேண்டும். அடுத்தவரை சார்ந்து இருக்காமல் சுயமாக வேலையை செய்து முடிப்பது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனை தான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

எதையுமே நல்ல விதமாகவும் நேர்மறை எண்ணத்துடனும் அணுக வேண்டும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வீண் பேச்சு, தூக்கம், பொழுதுபோக்கு போன்றவற்றை குறைத்து பயனுள்ள பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். நேரம் தவறாமை மிகவும் அவசியம். நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் அவசியம் அற்றவை. எல்லா நேரமும் நல்ல நேரமே. ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய தினத்தில் செய்த சிறப்பான பணி எது என உங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி நல்லதொரு பதிலை பெற்று விட்டீர்கள் என்றால் எதிர்காலம் சிறப்படையும்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: