Friday 27 January 2017

வெற்றியை நோக்கி … 6

 உன்னை அறிந்தால்...

யானை, தனது பலத்தை அறியாது என கூறுவார்கள். யானைக்கு மட்டுமல்ல, மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும். குறிப்பாக, இளைஞர்களில் பலருக்கும் உள்ள குறைபாடு இது. தன்னை பற்றியே முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஒவ்வொரு வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளுவது வியப்பானது. உண்மையில், உள்ளுக்குள் உள்ள திறமையை சரியாக அறிந்து செயல்படுவதில் தான் ஒவ்வொருவரின் வெற்றி சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

ஒருவர், தனக்குள்ளேயே எத்தகைய சிந்தனையை வளர்த்துக் கொள்கிறாரோ? அதற்கு ஏற்பவே அவருடைய வளர்ச்சியும் அமையும். தன் ஆளுமை என்பது உள்ளாடை. சுற்றுப்புற சூழல் என்பது மேலாடை. இந்த இரண்டையுமே மிக நேர்த்தியாக நெய்து தரும் திறமையான நெசவு தொழிலாளியாக இருப்பது மனம். எனவே, தனக்குத் தானே ஒருவன் ஊக்குவித்துக் கொள்ளும் எண்ணமே அவனை மிகச் சிறந்தவனாக்குகிறது அல்லது அவனை நிர்வாணப்படுத்துகிறது. இதைத் தான், ‘உன்னை அறிந்தால்.... நீ உன்னை அறிந்தால் ... உலகத்தில் போராடலாம்...’ என கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் உங்களை நீங்களை கண்டறிவதில், உங்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை கண்டறிவதில் சுணக்கம் ஏற்படலாம். ஆனால், விடா முயற்சி என்ற தூண்டிலை கொண்டு அதை கைப்பற்றி விட முடியும். அதன்பிறகு, அந்த திறமை அடிப்படையிலான குறிக்கோளை வரையறை செய்து கொண்டு அதை நோக்கிய பாதையில் பயணத்தை அமைக்க வேண்டும். தினந்தோறும் உங்கள் குறிக்கோளை நினைவு படுத்தினால் உங்களின் பாதை எளிதாக புலப்படும். நான் தன்னம்பிக்கை உள்ளவன்; துணிச்சலானவன்; நான் வெற்றி பெறுவேன் என்ற தாரக மந்திரத்தை உங்களுக்குள் கூறிக் கொண்டே இருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொண்டால் உலக வாழ்க்கையில் போராடலாம்.

தனக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும் ஹெலன் கெல்லரின் வாழ்க்கை பாடத்தை அறிந்து கொள்ளுவது அவசியம். சிறிய வயதிலேயே பேசும் திறன், கேட்கும் திறன், பார்வை திறன் அனைத்தையும் இழந்தும் கூட தொடுதல், உணருதல் ஆகியவற்றை கொண்டே படித்து பட்டம் பெற்று உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் ஒப்பற்ற பிரதிநிதியாய் காலம் கடந்து உயர்ந்து நிற்கிறார், ஹெலன் கெல்லர்

நல்ல உடல் நிலையுடன் இருப்பவருக்கே ஆயிரம் இன்னல்கள் உள்ள உலகில், ஹெலன் நிலைமையை சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். தன்னம்பிக்கை, அனுபவம், கல்வி என ஒவ்வொரு படிகளிலும் எந்த அளவுக்கு ஏறுகிறோமோ அந்த அளவுக்கு வெற்றியின் உயரமும் அதிகமாகும். வெற்றி பயணத்தில் தோல்வியை கண்டு துவளக் கூடாது. ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்வியை நோக்கிச் சென்றாலும் உற்சாகம் குறையக்கூடாது. தோல்விகளின் எண்ணிக்கை அதிகமானால் தான் வெற்றி ருசிக்கும். அதற்கு, உங்கள் மீது உங்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.

எந்தவொரு வாய்ப்பாக இருந்தாலும் அதன் கதவானது ‘இழு’ என்றே இருக்கும். எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாதகமாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நேர்மறை எண்ணமே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும். முன்னேற்றம் என்பது மெதுவாக நடைபெறுகிறதே என கவலைப்படக் கூடாது. மெதுவான வேகம் ஒருபோதும் பிரச்சினை அல்ல. ஒரே இடத்தில் தேங்கி கிடப்பது தான் பிரச்சினை.

ஒரு புத்தகத்தின் முகப்பு அட்டையை வைத்து அந்த புத்தகத்தை எடை போட முடியாது. அதுபோலலே, வெளித்தோற்றத்தை வைத்தே ஒரு மனிதரையோ, சக ஊழியரையோ மதிப்பீடு செய்ய முடியாது. அவ்வாறு மதிப்பிடவும் கூடாது. அதுபோல, தேவையற்ற விமர்சனமும் பூமராங் போல திரும்பி வந்து தாக்கக் கூடும் என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும். உங்களை முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொள்வதைப் போலவே மற்றவர்களையும் முழுவதுமாக உணர வேண்டும்.

எனது வாழ்க்கையில் உலகத்தை மாற்ற நினைத்து தோல்வியடைந்தேன். பக்கத்து வீட்டுக்காரர்களை மாற்ற நினைத்து தோற்றேன். சக ஊழியர்களை மாற்ற நினைத்து தோல்வியை தழுவினேன். என் வாழ்க்கையில் பல ஆண்டுகளை இப்படியே கழித்து விட்டேன் என புலம்புவது கால விரயம். சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். இதைத்தான், ‘அப்டேட்டாக இருக்கிறான்’ என கூறுகின்றனர். புறச் சூழ்நிலை மட்டுமல்ல நீங்கள் சார்ந்துள்ள துறைக்கும் இது பொருந்தும். உங்களை முழுமையாக உணர்ந்து, எந்த நேரமும் அப்டேட்டாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றியாளராக, சாதனையாளராக வலம் வரலாம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: