Wednesday 16 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 17



= வை.ரவீந்திரன்.

1967ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு, தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அண்ணா, 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றம் செய்தார். அரசு கெஜட்டின் படி, சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வர், தமிழ்நாட்டின் முதலாவது முதல்வர் என்ற பெருமைகள் அண்ணாவையே சேரும்.



தமிழ்நாடாக மாற்றம் பெற்ற பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பொதுத்தேர்தல் 1971ம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு முன்பாக மாநில அரசியலிலும், மத்திய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்ட 20 நாளிலேயே அண்ணா மறைந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு திமுகவுக்குள் எழுந்த கடும் போட்டிக்கு இடையே கருணாநிதி தேர்வானார். அவருக்கு எம்ஜிஆர் முழு ஆதரவு அளித்தார். திமுக தலைவராக கருணாநிதி, பொருளாளராக எம்ஜிஆர் பொறுப்பேற்றனர்.



மத்தியில் பிரதமர் இந்திரா காந்தியின் சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகம் சுழித்தனர். விளைவாக, காங்கிரஸ் பிளவானது. மூத்த தலைவர்கள் ஒன்று திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியை அகில இந்திய காங்கிரஸ் (ஆர்கைனைஸ்டு), சுருக்கமாக ஸ்தாபன காங்கிரஸ் என அழைத்தனர். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்பட்டது. 




தமிழ்நாட்டில் காமராஜர் இருந்ததால் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தான் வலிமையுடன் விளங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில், 1971 தேர்தலில் அதிசயங்கள் நிகழ்ந்தன. துவரை எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜியும், காமராஜரும் இந்த தேர்தலில் கைகோர்த்தனர். பின்னாளில் எதிரும் புதிருமாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் இணைந்து சந்தித்த ஒரே தேர்தலும் இதுதான்.

திமுக தலைவராக கருணாநிதி சந்தித்த முதல் பொதுத் தேர்தல் இது. அதுவரை திராவிட இயக்கத்துக்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை, அந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது.

(நினைவுகள் சுழலும்)

No comments: