Monday 14 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 16

= வை.ரவீந்திரன்.

தேர்தலின்போது, அரசியல் கட்சிகள் என்றதும் சின்னங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். 1971 தேர்தலின் போது, அகில இந்திய காங்கிரஸ் பிளவு பட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிரிந்து, சின்னமும் மாறியது. எனவே, 1971 தேர்தலுக்கு முன் அதை பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 



1952ம் ஆண்டு ஜனவரியில் 9 நாட்கள் நடந்த சட்டப் பேரவை தேர்தலில், கட்சிகளுக்கு சின்னம் கிடையாது. வண்ண பெட்டிகள் தான். காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் பெட்டி, நீதிக்கட்சிக்கு சிவப்புப் பெட்டி.  1957ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி தரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சின்னம் இரட்டை காளை. ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம் சின்னம். 



1957ல் முதன் முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய திமுகவினருக்கு, சேவல் மற்றும் உதயசூரியன் என சுயேச்சை சின்னங்கள் தான் கிடைத்தன. அந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு, 1958ம் ஆண்டில் மாநில கட்சியாக திமுக அங்கீகரிக்கப்பட்டு உதய சூரியன் சின்னம் நிரந்தரமானது. இந்தியாவில் 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை தொடர்ந்து வைத்திருக்கும் கட்சி திமுக மட்டுமே. அடுத்ததாக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கூறலாம்.







1969ம் ஆண்டில் இந்திரா அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டதும் இரட்டை காளை சின்னம் முடக்கப்பட்டது.
இந்திரா கட்சிக்கு ‘பசுவும் கன்றும்’ சின்னமும், அவரை எதிர்த்த காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு ‘கை ராட்டை சுற்றும் பெண்’ சின்னமும் ஒதுக்கப்பட்டன. 1977ல் மீண்டும் காங்கிரஸ் பிளவு பட்டபோது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் (இந்திரா) கட்சிக்கு கை சின்னம் கிடைத்தது. அதுவே, 40 ஆண்டுகளாக நீடித்து இருக்கிறது. 



தமிழக காங்கிரசில் இருந்து சில தலைவர்கள் வெளியேறி கட்சி தொடங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின. 1980ல் குமரி அனந்தன் தொடங்கிய காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் (காகாதேகா) கட்சிக்கு ரோஜாப்பூ, 1996ம் ஆண்டு மூப்பனார் தலைமையில் தோன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள், வாழப்பாடி ராமமூர்த்தி தொடங்கிய கட்சியின் ‘மண்டியிட்டு மலர் தூவும் பெண்’ சின்னம், நெடுஞ்செழியன் கட்சியின் (அதிமுகவில் இருந்து பிரிந்த நால்வர் அணி) தென்னை மரம், மதிமுக (குடை, பம்பரம்), பாமக (யானை, மாம்பழம்), தேமுதிக (முரசு) என என தமிழக தேர்தல் களங்களில் சின்னங்களுக்கு கணக்கில்லை. 





 எம்ஜிஆரால் 1972ல் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ள இன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னம், தேர்தல் ஆணையத்தால் சில ஆண்டு முடக்கி வைக்கப்பட்டு இருந்த தகவல், இன்றைய புதிய தலைமுறையினருக்கு ஆச்சரியமூட்டும். 1989ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் இரட்டை இலை சின்னம் இல்லை. அதிமுக (ஜெயலலிதா) அணி, அதிமுக (ஜானகி) அணி என பிளவு பட்டிருந்ததால் சேவல் சின்னத்தில் ஜெ. அணியும், இரட்டை புறா சின்னத்தில் ஜானகி அணியும் களமிறங்கின. தேர்தலுக்கு பிறகு, இரண்டு அணிகளும் இணைந்ததால் இரட்டை இலை மீண்டும் துளிர்த்தது. 

(நினைவுகள் சுழலும்) 

No comments: