Thursday 3 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 11

= வை.ரவீந்திரன். 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 1967ம் ஆண்டு தேர்தல் திருவிழாவை காணும் முன் தமிழக சட்ட மேலவை பற்றிய நினைவுகளை அசை போடுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழக சட்ட மேலவை ஆரம்ப காலம் என்பது 1861ம் ஆண்டில் தொடங்குகிறது. காலனி ஆதிக்கத்தில், ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறும் சபையாகத்தான் மேலவை தொடங்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 2 முதல் 10 முறை மட்டுமே கூடியது. ஜமீன்தார், பெரிய நிலச்சுவான்தார் என 21 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 





1919ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சி நிர்வாகத்தின் சுய நிர்ணய சபை தொடர்பான ‘எட்வின் சாமுவேல் மாண்டேகு -  செம்ஸ்போர்டு பிரபு’ ஆகியோரின் (மாண்டேகு செம்ஸ்போர்ட்) சீர்திருத்தம் அமலுக்கு வந்ததும் உறுப்பினர் எண்ணிக்கை 127 ஆக உயர்த்தப்பட்டு 1920ம் ஆண்டு முதன் முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. 98 பேர் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டனர். சொத்து வைத்திருப்பவர்கள், பட்டதாரிகள் என ஒரு சிலருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. 4 கோடி மக்கள் தொகையில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.






1920ம் ஆண்டு சட்டமேலவை தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது. தியாகராய செட்டி தலைமையிலான நீதிக்கட்சி 63 இடங்களில் வென்றது. சுப்பராயலு ரெட்டியார் முதல்வரானார். பின்னர், 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல்களும் நடைபெற்றன. பனகல் ராஜா (1921-1926), பி.சுப்பராயன் (1930 வரை), முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா என அடுத்தடுத்து சென்னை மாகாண முதல்வராக தேர்வு பெற்றனர். 

1937 வரை இந்த நடைமுறையே நீடித்தது. 1937ம் ஆண்டில், 215 உறுப்பினர் (எம்எல்ஏ) கொண்ட சட்டப்பேரவை உருவானதும் மேலவை உறுப்பினர் (எம்எல்சி) எண்ணிக்கை 54 ஆக குறைக்கப்பட்டு சட்டப் பேரவையின் துணை அமைப்பாக மேலவை மாறியது. அதில், 46 பேரை எம்எல்ஏக்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்தனர். மீதியுள்ளோரை ஆளுநர் நியமித்தார். சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக இந்தியா மாறும் வரை இது நீடித்தது.

(நினைவுகள் சுழலும்)

No comments: