Tuesday 11 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 11

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்து முத்திரை பதித்தவர்கள் ஒரு பக்கம் இருக்க ஒரிரு படங்களை மட்டுமே கொடுத்து ஜொலிக்கும் பவளங்களும் உண்டு. அவர்களில் ஒருவர் தாதா மிராசி. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். சினிமா கதாசிரியர், இயக்குநர். நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அண்ணாவின் ஆசை, பூவும் பொட்டும், மூன்று தெய்வங்கள், ரத்த திலகம் இப்படி ஒரு சில படங்கள் மட்டுமே அவர் இயக்கி இருக்கிறார். 



ஆரம்பத்தில் ஜனரஞ்சகமாக செல்லும் திரைக்கதை திடீரென கிரைம் எல்லைக்குள் போவது தாதா மிராசியின் ஸ்டைல். இவரது பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் குற்ற உணர்வை மறைத்து மருளுபவையாகவே இருக்கும். மேற்சொன்ன படங்களில் கூட அப்படித்தான்.

ஜெயிலில் இருந்து தப்பித்து திருட வந்த வீட்டிலேயே அளிக்கும் உபசரிப்பை பார்த்து மருளும் மூன்று திருடர்கள தான் மூன்று தெய்வங்கள் கதை. அண்ணாவின் ஆசையும் படமும் அப்படித்தான். ஆனால், போரடிக்காமல் படத்தை கொண்டு செல்வது தாதாமிராசியின் ஸ்டைல். அதில் புதிய பறவை தனி முத்திரை.

இன்று வரை சினிமா ரசிகர்களால் உச்சரிக்கப்படும் ஒரு வசனம். சரோஜாதேவியின் "கோப்பால்... கோப்பால்..." என்பதை மறுக்க முடியாது.  இந்த வசனம் இடம் பெற்ற படம் "புதிய பறவை". சிவாஜி கணேசனின் சொந்த தயாரிப்பான இந்த படத்துக்கு அவரது எவர்கிரீன் ஹிட் வரிசையில் முக்கிய இடம் உண்டு. அவரது ரசிகர்களாக இல்லாதவர்களும் கொண்டாடும் படம், புதிய பறவை. இது வங்காளி திரைப்படம் ஒன்றின் ரீ மேக்.



மனைவியை கொலை செய்து விட்டு, மற்றொரு பெண் மீது காதல் ஏற்பட, மனதுக்குள் கொலையையும் காதலையும் கலந்து தவிக்கும் ஆன்ட்டி ஹீரோ வேடம், அந்த படத்தில் சிவாஜிக்கு.

மிகப்பெரிய மல்டி மில்லியனரான சிவாஜி, இரவு நேர கிளப்பில் பாடல்களை பாடும் சவுகார் ஜானகியை காதலித்து மணமுடித்து விட்டு, நடத்தையால் கோபமடைந்து அவரை கொன்று ரயில் தண்டவாளத்தில் வீசி விடுவார். இது சிங்கப்பூரில் நடக்கும்  சம்பவம். அதன்பிறகு, எதுவுமே தெரியாதது போல ஊட்டி பங்களாவுக்காக வரும் சிவாஜியை கப்பலில் கூடவே பின்தொடர்ந்து வரும் ரகசிய போலீஸ் அதிகாரிகளாக எம்ஆர் ராதா, சரோஜாதேவி.

படத்தின் ஆரம்பமே கப்பல் பயண காட்சிதான். இரவு நேர கிளப் டான்ஸ், பாடல், மது விருந்து, மேலை நாட்டு நடனம் என வித்தியாசமான தளத்தில் செல்லும் கதை, இடைவேளைக்கு பிறகு திகில் பிளஸ் கிரைம் பாதையில் செல்லும் போது தாதா மிராசியின் திறமை பளிச்சிடும். எம்எஸ்வி, ராமமூர்த்தி இரட்டையர்களின் இசையும் பாடல்களும் சேர்ந்து ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் விருந்து என்றே சொல்லலாம்.

"லதா, அத்தனையும் நடிப்பா... என்கிட்ட உண்மையை வரவழைக்க காதல் தானா உனக்கு கிடைத்தது..." என சிவாஜி பேசும் கிளைமாக்ஸ் வசனம், எவர்கிரீன்.

காதலையும் கிரைமையும் கலந்து கொடுத்த தாதா மிராசி, இந்த படத்தில் நடித்தும் இருக்கிறார். பிளாஸ்பேக்கில் சிவாஜியின் தந்தையாக வந்து சவுகார் ஜானகியால் குடும்ப மானம் பறிபோவதை கண்டு பொறுக்காமல் உயிரிழக்கும் கோடீஸ்வரர், தாதா மிராசி தான்



சிவாஜியின் நண்பரான இவர், சித்ராலயா கோபுவிடம் சினிமா கதை ஒன்றை சொன்ன விதம் தான், "காதலிக்க நேரமில்லை" படத்தில் டிஎஸ் பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சிக்கான இம்ப்ரஷன் என்பது கூடுதல் தகவல்

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: