Thursday 20 August 2020

எஸ்பிபி...

ஆறுதலை தந்த குரலோனுக்கு தேறுதலை தா இறைவா....

.

.

.

ஒட்டு மொத்த தமிழகமே பிரார்த்திக்கிறது. 1984ல் இதுபோல ஒரு கூட்டு பிரார்த்தனை. பாட்டுக் கச்சேரிகளில் எல்லாம் முதலில் பக்தி பாடல்களை பாட மாட்டார்கள். "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்..." பாடல்தான் முதலில். அந்த வேண்டுதல் பலித்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து ஹாட்ரிக் சாதனையுடன் மீண்டும் முதல்வரானார், எம்ஜிஆர்.

சினிமாவில் தனது முதல் குரலை அவருக்காக கொடுத்த எஸ்பிபி-க்கும் 35 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வேண்டுகிறது, கூட்டுப் பிரார்த்தனையுடன். இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் இருக்கிறார், எஸ்பிபி.



நான் அறிந்தவரை தமிழ் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடும் பாடகர் அவர் தான். எவ்வளவு உச்சஸ்தாயி, சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதில் அதை கேட்கலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும். ஆச்சரியமாக, 'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் 'சிப்பிக்குள் முத்து'வில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொர் பாடல்களும் எஸ்பிபியையே எனக்கு நினைவூட்டும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடலின் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடியவர், இப்போது பிராணனுக்காக தவிப்பது மனதை பிசைகிறது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வியும் புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே. அதற்கு ஒரு உதாரணம்.

பின்னணி பாடல், நடிகர், இசையமைப்பாளர் (துடிக்கும் கரங்கள் படத்தின் மேகம் முந்தானை... என்ற பாடலே போதுமே) என ஜெயித்த அவரால் இயக்கத்திலும் வெல்ல முடியும். ஆனால் செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன காரணம்: 

என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. 

இவ்வளவு குழந்தை மனதோடு அரை நூற்றாண்டுக்கு மேலாக, தமிழ் ரசிகர்களின் மனங்களுக்கு ஒவ்வொரு சூழலிலும் ஆறுதலை தந்த அன்னமையாவுக்கு தேறுதலை தா இறைவா...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: