Saturday 22 August 2020

வெல்கம் விநாயகா...




அன்னையின் அங்கத்தில் 

அவதரித்த அழுக்குப் பிள்ளை

சாணமும் சந்தனமும் 

சமமென கருதும்

சமத்துப் பிள்ளை

எருக்கமும் அருகமும்

அருமையெனும் அன்பு பிள்ளை


எண்ணம்போல வளைந்து

எண்ணியதை நிறைவேற்றும்

எல்லோரின் வீட்டுப்பிள்ளை

நீரில் கரைத்தாலும்

தடியால் அடித்தாலும்

கோபமே கொள்ளாத

அசராத பிள்ளை 


கைப்பிடி உருண்டையோ

கடல் போல உருவமோ

மூஞ்சுறு வேடமோ

மாமன்னன் வேடமோ

மனம் கோணாமல் மகிழ்ந்து

மகிழ்வுடன் குடியேறும்

மகிழ்ச்சி பிள்ளை


நினைத்தவர் நினைத்தபடி

இழுத்தவர் இழுத்தபடி

கண்டவர் கண்டபடி

எந்தபடி எப்படியானாலும்

படிப்படியாய் உயர்த்தும்

படித்துறைப் பிள்ளை


இந்த பிள்ளை யார்

இந்த பிள்ளை யார்

என கேட்கத் தூண்டும்

எங்கள் பிள்ளையார்


#நெல்லை_ரவீந்திரன்

No comments: