Saturday 15 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 13

தமிழ் சினிமாவை முதன் முதலாக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பிய பெருமைக்கு சொந்தக்காரர். வழக்கமான எம்ஜிஆர் பார்முலா எதுவுமே இல்லாமல் படம் எடுத்து காலம் கடந்தும் பேச வைத்தவர். அவர்தான் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்.


ஆறடிக்கும் அதிகமான ஆஜானுபாக தோற்றம் கொண்டவர். கேவி மகாதேவன் எம்ஜிஆர் காம்பினேஷனில் வெளியான குமரி (1952) படம்தான் உதவி இயக்குநராக இவரது என்ட்ரி. சினிமாவில் அவர் நுழைந்தது எதிர்பாராதது. டிகிரி முடித்து ஐஏஎஸ் முயற்சி செய்தபோது நண்பர் வீட்டுக்கு சென்ற அவரின் எழுத்து ஆர்வத்தை பார்த்த நண்பரின் தந்தை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அந்த தந்தை அன்றைய பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் பத்மநாப அய்யர். அப்போது, குமரி படத்தை எடுத்துக் கொண்டிருந்தவர் அதிலேயே உதவி இயக்குநராக திருலோகச்சந்தரை சேர்த்துக் கொண்டார். 


ஜூபிடர் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் அன்றைய பிரபல இயக்குநர்களிடமும் பணி புரிந்த திருலோகச்சந்தருக்கு 'விஜயபுரி வீரன்' (1960) படத்தில் கதாசிரியர் வாய்ப்பும் வழங்கியவர், இயக்குநர் ஜோசப் தளியத். அன்றைய சூப்பர் ஹிட் படமான விஜயபுரி வீரனின் கதாநாயகன் ஆனந்தன், 1980, 1990களில் கலக்கிய டிஸ்கோ சாந்தியின் தந்தை. ஏ.சி.திருலோகச்சந்தர் முதன் முதலில் இயக்கிய வீர திருமகன் (1962) படத்தின் கதாநாயகனும் ஆனந்தன் தான். 



அந்த படத்தின் நாயகி சச்சு. 'ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே  அழகிய ராணி….' 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பேசாத கதைகளை பேச வந்தாள்...' போன்ற காலத்தை வென்ற ஹிட் பாடல்கள், இந்த படத்தில்தான். முதல் படமே ஹிட்டடிக்க ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குநரானார் திருலோகச்சந்தர். தனது நெருங்கிய நண்பரான திருலோகச்சந்தரை ஏவிஎம்மில் அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் அசோகன். இருவரும் அந்தக் காலத்து பட்டதாரிகள், மனம் விட்டு பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள். 


தமிழ், இந்தி இரு மொழிகளில் ஏவிஎம் தயாரித்த சூப்பர் ஹிட் படமான கருப்பு நிற பெண் எதிர் கொள்ளும் அவலங்களை பேசும் 'நானும் ஒரு பெண்' படத்தின் இயக்குநர் இவரே. அந்த படத்தின் 'கண்ணா கருமை நிற கண்ணா உன்னை காணாத கண் இல்லையே...' பாடல், ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்.



ஏவிஎம் பேனரில் எம்ஜிஆர் நடித்த ஒரே படம். சண்டைக் காட்சிகளும் வில்லனும் இல்லாமல் வித்தியாசமாக எம்ஜிஆர் நடித்த படம். ஏவிஎம்மின் முதல் கலர் படம். அதன் 50வது தயாரிப்பு என பல பெருமையை கொண்ட  'அன்பே வா' இயக்குநரும் ஏ.சி.திருலோகச்சந்தர்தான். 50 ஆண்டுகளை கடந்து இன்றைய தலமைுறையும்  ரசிக்கக் கூடிய அந்த படமே திருலோகச்சந்தரின் திறமையை கூறும்.


இதுபோல, அவன்தான் மனிதன், பாபு, எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், இருமலர்கள், பைலட் பிரேம்நாத், டாக்டர் சிவா, லாரி டிரைவர் ராஜாகண்ணு, குடும்பம் ஒரு கோயில் விஸ்வரூபம் என 1980கள் வரை சிவாஜியை அவர் இயக்கிய படங்களின் பட்டியல் மிக நீளம்.



தந்தை மகன்கள் என சிவாஜி கணேசன் மூன்று வேடங்ளில் கலக்கும் 'தெய்வமகன்' (1969) படத்தை இயக்கியதும் ஏ.சி.திருலோகச்சந்தர்தான். முகத்தில் வடுவுடன் கோரமாக தந்தை, மூத்த மகன். அழகான தோற்றத்தில் இளைய மகன் என சிவாஜி அதில் வாழ்ந்திருப்பார். தமிழ் சினிமாவின் மைல் கல் அந்தப்படம்.  ஆஸ்கார்  விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் தமிழ் படமும் அதுவே. அந்த பெருமை இயக்குநர்  திருலோகச்சந்தரையே சேரும். அந்த படத்தின் 'கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே...' பாடல் எவர்கிரீன் ரகம்.


1967ல் 'இருமலர்கள்' வெளியானபோது 'ஊட்டி வரை உறவு'. 1970ல் 'எங்கிருந்தோ வந்தாள்'படம் வந்தபோது 'சொர்க்கம்'. 1974ல் 'டாக்டர் சிவா' பட ரிலீசின் போது 'வைர நெஞ்சம்' என ஒரே நாளில் சிவாஜி படமே சிவாஜி படத்துக்கு போட்டியாக வெளியானபோது வெற்றியை தனதாக்கியவர் இயக்குநர் திருலோகச்சந்தர். சிவாஜியை இவர் இயக்கிய சுமார் 25 படங்களில் பெரும்பாலானவை ஹிட் ரகங்களே.

இயக்கத்தின் கூடவே அவர் கதை, திரைக்கதை எழுதிய படம் "பார்த்தால் பசி தீரும் (1962)". ஜெமினி, சிவாஜி இணைந்து நடித்த இந்த படத்தி் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார், கமல்ஹாசன். அதுவும் இரட்டை வேடங்களில். ரவிச்சந்திரனை வைத்து திருலோகச்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' இன்று வரை பேசப்படும் திரில்லர் திரைப்படம்.

நடிகர் சிவகுமாரை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவரும் இவர்தான். அந்த படம் 'காக்கும் கரங்கள் (1966)'. அதே சிவகுமாரை வைத்து பத்தாண்டுகள் கழித்து  இயக்கிய வெற்றிப் படம் 'பத்ரகாளி'. இன்றை டிவி சீரியல்களின் இவருக்கு பதில் இவர் என்ற கலாசாரத்தை அன்றே சினிமாவில் அறிமுகம் செய்தவர் திருலோகச்சந்தர். பத்ரகாளி படத்தின் ஹீரோயின் ராணி சந்திரா, படப்பிடிப்பு முடியும் முன்பே விமான விபத்தில் இறந்து விட்டதால், கிளைமாக்ஸ் காட்சிகளை குரூப் டான்சராக இருந்த புஷ்பா என்ற பெண்ணை வைத்து படமாக்கினார் திருலோகச்சந்தர்.

'வணக்கத்துக்குரிய காதலியே' படத்தின் மூலமாக ரஜினி, ஸ்ரீதேவியையும் இயக்கி இருக்கிறார். நதியாவுக்கு அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்து 1987ல் வெளியான அன்புள்ள அப்பா படத்தின் இயக்குநரும் ஏ.சி.திருலோகச்சந்தர் தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: