Wednesday 12 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 12

சினிமா பாடல்கள் என்ற உடனேயே எல்லோரின்  நினைவிலும் உடனடியாக வருவது,  எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா என்ற பெயர்கள் தான். ஆனால், ஜனரஞ்சக தமிழ் சினிமா பாடல்களில் இவர்களின் முன்னோடி கே.வி. மகாதேவன் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் கர்நாடக இசையும் தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் சுப்புலட்சுமி போன்ற பாடக, பாடகி கம் நடிக, நடிகைகளுக்கே இடமுண்டு என இருந்த 1940களில் அறிமுகமானவர், கே.வி.மகாதேவன். 


இன்றைய நாகர்கோவில் தான் அவரது சொந்த ஊர். இவரது தந்தை, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆஸ்தான நாதஸ்வர கலைஞர். 1942ல் வெளியான மனோண்மணி படத்தில் துவங்கிய இவரது திரை இசை, அரை நூற்றாண்டு காலம் தமிழ், தெலுங்கு என தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகம்.


எம்ஜிஆர் நடிப்பில் 1952ல் வெளியான குமாரி படம்தான் அவருக்கு பெயர் வாங்கி தந்தது. 1960 மற்றும் 1970களில் தமிழ் சினிமா பாடல்களில் இவரது ஆதிக்கமானது,  விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

சுவாமி... மன்னா... இப்படியான புராண கால டயலாக்குகள்,  கர்நாடக இசை ராகங்களுன்  வெளியான படங்களுக்கு இசையமைத்த இதே கேவி மகாதேவன், ‘காட்டுக்குள்ளே திருவிழா கன்னி பெண்ணின் மணவிழா...‘ ‘கட்டித் தங்கம் வெட்டி எடுத்து காதல் எனும் சாறு பிழிந்து...‘ 'ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொரு பாப்பா..' என எம்ஜிஆருக்கும்


‘நலம் தானா, நலம் தானா.. உடலும் உள்ளமும் நலம் தானா...‘ 'யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை' என சிவாஜிக்கும் ஜனரஞ்சக பாடல்களில் காதல் மாளிகை கட்டிக் கொடுத்திருக்கிறார், கேவி மகாதேவன்.


எம்ஜிஆரை வைத்து சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 16 படங்களுக்கும் இவர் தான் இசையமைப்பாளர். ‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா, தம்பி பயலே….‘ ‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…‘, ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்..‘ ‘கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி‘, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...' என எம்ஜிஆரின் தத்துவ பாடல்களுக்கு மட்டுமல்ல, எம்ஜிஆரின் சொந்த தயாரிப்பான அடிமைப்பெண் படத்துக்கும் இசையமைத்தது கேவி.மகாதேவன் தான்.



ராஜராஜன், மாட்டுக்கார வேலன், என் அணணன், பல்லாண்டு வாழ்க, பட்டிக்காட்டு பொன்னையா என எம்ஜிஆர் நடித்த சுமார் 40 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், கேவி மகாதேவன். எம்எஸ்வி பாடலோ என நினைக்கும் 1960களின் பல பாடல்கள் இவருடையதாக இருப்பதையும் அறிய முடிகிறது.


‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே...‘ ‘ மணமகளே, மருமகளே வா வா..‘ உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை...‘ ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே நில்லு கொஞ்சம் நானும் வாரேன்...‘, 'அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலேயே எனக்கு...', 'போறவளே போறவளே பொன்னுரங்கம் என்ன புரிஞ்சிக்காம போறியே என் கண்ணு ரங்கம்...' என காலத்தால் அழியாத கீதங்களை தந்தவரும் அவரே. 



இயக்குநர், கதாசிரியர், நடிகர் என பல அவதாரம் எடுத்த ஏ.பி.நாகராஜனின் பேவரைட் இவர்தான்.  ஏ.பி.நாகராஜன் இயக்கிய, சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்ற திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், தில்லானா மோகனாம்பாள் படங்களின் இசையமைப்பாளர் கேவி மகாதேவன்.   

வசந்த மாளிகை, படிக்காத மேதை, எங்கள் தங்க ராஜா, நவராத்திரி, மக்களை பெற்ற மகராசி என சிவாஜி கணேசனுக்கும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவரின் கைவண்ணங்கள் தான், ‘சித்தாடை கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு...‘ ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்..' போன்ற காலம் கடந்து நிலைத்து நிற்கும் பாடல்கள். ரசிகனுக்கு பிடித்தமான இசையை கர்நாடக இசையுடன் கலந்து ஊட்டுவது கேவி மகாதேவனின் ஸ்டைல்.  1950களின் இறுதியில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததோடு தமிழில் இருந்து இந்திக்கு சென்ற முதல் படமான சம்பூர்ண ராமாயணத்துக்கும் இவர்தான் இசை. 

'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்..' என காற்றினில் கீதம் இசைத்த இவரது இசை ஆட்டம் 1970களிலும் ஓயவில்லை. சிவகுமார் நடித்த ஏணிப்படிகள் படத்தின் இசையும் இவரே. அந்த படத்தின் ‘பூந்தேனில் கலந்து, பொன் வண்டு எழுந்து...‘ ‘ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு, இங்க என்னாத்த கண்டிங்க இந்த சிரிப்பு..‘ பாடல்களை கேட்காத 1980ஸ் கிட்ஸ் எவருமே இருக்க முடியாது.

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி என 1980களின் பிற்பகுதி வரை தமிழில் இசையமைத்த அவர், தெலுங்கில் 1994 வரை பாடல்களை தந்திருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு மேலாக திரை இசையில் திலகமாக இருந்த கேவி மகாதேவன், 1980ல் தெலுங்கில் வெளியாகி, இசைக்காகவே ஹிட்டடித்து இன்றளவும் பேசப்படும் சங்கராபரணம் படத்தின் மூலம் கர்நாடக இசையில் தான் எப்பவுமே தான் ஒரு மேதை என்பதை சினிமா உலகுக்கு காட்டினார். அதில் இருந்து பத்தாண்டுகள் கழித்து இவர் இசையமைத்த ‘ஸ்வாதிகிரணம்' தெலுங்கு படம் இசைக்காகவே விருதுகளை அள்ளி குவித்தது.

எம்எஸ் விஸ்வநாதனுக்கே வாய்ப்பு வழங்கியவர்.  ஜெயலலிதாவை ‘அடிமைப்பெண்‘ படத்தின் மூலம் (அம்மா என்றால் அன்பு...) பாடகியாக்கியவர்.  அதே படத்தில், 'ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலேவே வா...' பாடல் வழியாக எஸ்பி. பாலசுப்பிரமணியம் என்ற காலத்தை வென்ற பாடகரை தமிழ் ரசிகர்களுக்கு தந்தவர் என ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரர், திரை இசை திலகம் கேவி மகாதேவன்

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: